பாயிண்ட் இதுதான்! ரவீந்திராத் எம்பியின் வெற்றி செல்லாததற்கு என்ன காரணம்? நீதிபதி தீர்ப்பு முழுவிபரம்
சென்னை: 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்பியான நிலையில் அவரது வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தான் அவரது வெற்றி செல்லாது என நீதிபதி கூறியது ஏன்? என்பது வழக்கின் முழுதீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தினார்.

இந்த தேர்தலில் ஓபி ரவீந்திரநாத் 76,693 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தோற்கடித்தார். இந்நிலையில் தான் ஓபி ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தேனி நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளரான மிலானி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில் சொத்து விபரங்கள், வருமானத்தை மறைத்துள்ளார். இதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஓபி ரவீந்திரநாத் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கலான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து மிலானி தொடர்ந்த தேர்தல் வழக்கு மீது விசாரணை நடந்து வந்தது.
ஓபி ரவீந்திரநாத் 3 முறை நீதிமன்றத்தில் ஆஜராகி தன்தரப்பு விபரங்களை அளித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இதையடுத்து இந்நிலையில் தான் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அதிரடியாக உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்எஸ் சுந்தர் வழங்கினார்.
இந்நிலையில் தான் ஓபி ரவீந்திரநாத் குமார் எம்பியின் வெற்றி செல்லாது என எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்எஸ்சுந்தர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளத்தை ரவீந்திரநாத் எம்பி மறைத்துள்ளார். விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்ததாக கூறிய நிலையில், வட்டி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தையும் மறைத்துள்ளார்.
ரூ.4 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் என்று மட்டுமே வேட்பு மனுவில் காட்டியுள்ளார். வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பதையும் வேட்பு மனுவில் மறைத்துள்ளார். இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை என வழக்கு தொடரப்பட்டது.
இந்த வேளையில் பணப்பட்டுவாடா மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் எந்த தன்னிச்சையான சாட்சியையும் மனுதாரர் மிலானி தரப்பில் கொண்டுவரவில்லை. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதனால் பணப்பட்டுவாடா செய்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான குற்றவழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதால் அவர் தகவலை மறைத்தார் என்ற காரணத்தை கூறி, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்கிற ரவீந்திரநாத் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. சொத்து, கடன், பொறுப்பு, வருமானம் ஆகியவற்றை மறைத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வேட்புமனுவை ஏற்றது முறையற்றது. அதனால் இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொண்டு, ஒ.பி.ரவீந்திரநாத்குமார் பெற்ற வெற்றி செல்லாது'' என அவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications