"டேமேஜ் கண்ட்ரோல்".. ஸ்டாலினுக்காக முதல் ஆளாக வந்த அழகிரி.. பாராட்டி தள்ளிய ப.சி.. அப்போ சுபம்தான்!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டி பேசி வருகின்றனர். காங்கிரஸ் - திமுக கூட்டணியில் சமீபத்தில் சின்ன விரிசல் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மூத்த தலைகள் அதில் "பெவிக்காலை" போட்டு ஒட்டி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை கைதியாக இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது. பேரறிவாளனின் போராட்டம் அவரின் விடுதலைக்கு எந்த அளவிற்கு காரணமோ அதே அளவிற்கு தமிழ்நாடு அரசின் வாதமும் இதில் முக்கிய பங்கு வகித்தது.
மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வைத்த தீவிர வாதமும் பேரறிவாளன் விடுதலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மாநிலங்களவை தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிப்பு.. நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்
காங்கிரஸ் எதிர்ப்பு
ஆனால் தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. தமிழ்நாடு அரசு வாதம் செய்த விதத்தை காங்கிரஸ் கண்டித்தது. இந்த விடுதலைக்கு எதிராக கடுமையாக அறிக்கைகளை அக்கட்சி வெளியிட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில், கொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சிறையில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விடுதலை செய்ய சொல்லி ஏன் யாரும் குரல் எழுப்பவில்லை. அவர்கள் எல்லாம் தமிழர்கள் கிடையாதா?. ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் மட்டும்தான் உங்களுக்கு தமிழர்களாக தெரிகிறார்களா, என்று விமர்சனம் வைத்தார்.
விமர்சனம் மேல் விமர்சனம்
அதோடு பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்தால் சிறிய கட்சி வளரும் என்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளோடு கூட்டணி இருந்தும் காங்கிரஸ் வளரவில்லை. எங்கள் வளர்ச்சி கூட்டணியால் பாதிக்கப்பட்டது என்று திமுக கூட்டணியை கே. எஸ் அழகிரி சீண்டி இருந்தார். இதனால் எங்கே காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிகிறதோ என்ற கேள்வியும் எழுந்தது. அதோடு முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்தில் பேரறிவாளனை கட்டிப்பிடித்தார். இது பெரிய சர்ச்சையானது.
காங்கிரஸ் விரும்பவில்லை
இந்த நிகழ்வை காங்கிரஸ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் திமுகவை விமர்சனம் செய்து வந்தனர். இந்த தொடர் சம்பவங்களால்.. இரண்டு தரப்பிற்கும் சுமுக உறவு நீடிக்குமா.. கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட டேமேஜை சரி செய்யும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலினுக்கு மீண்டும் friend request கொடுக்கும் விதமாக அவரை பாராட்டி பேசி வருகின்றனர். சமீபத்தில் நேரு விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் மாநில உரிமை, மொழி உரிமை, நீட் எதிர்ப்பு என்று பல விஷயங்களை துணிச்சலாக பேசினார்.
பாஜக எதிர்ப்பு
இதற்கு எதிராக பாஜக கடும் கண்டனங்களை, விமர்சனங்களை வைத்தது. இந்த நிலையில்தான் ஸ்டாலினுக்கு ஆதரவாக கே.எஸ் அழகிரி கருத்து தெரிவித்தார். ஆதரவு என்பதை தாண்டி சில பெரிய வார்த்தைகளை பயன்படுத்தி ஸ்டாலினை புகழ்ந்து தள்ளி இருந்தார் கே. எஸ் அழகிரி. பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து உரையாற்றியது மிகுந்த பாராட்டுக்குரியது. பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு மத்திய அரசின் நிதி ஆதாரங்களுக்கு தமிழகம் மிகப்பெரிய அளவில் பங்களிப்பு ஆற்றி வருவதை புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்தார்.
பாராட்டு மேல் பாராட்டு
மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6 சதவீதம். ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்துக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.2 சதவிகிதம் மட்டுமே என்று பிரதமர் மோடியின் முகத்திற்கு நேராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது அவரது அரசியல் பேராண்மையையும், துணிவையும் வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம், என்று கேஎஸ் அழகிரி பேராண்மை என்றெல்லாம் குறிப்பிட்டு ஸ்டாலினை பாராட்டி இருந்தார்.
ப. சி
கே. எஸ் அழகிரி ஸ்டாலினை ஒரு பக்கம் பாராட்ட இன்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரமும் ஸ்டாலினை பாராட்டினார். யூனியன் கவர்ன்மென்ட் என்பது அரசியல் சாசனத்தில் உள்ள வார்த்தை. ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. பிரதமர் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக தேவைகளை எடுத்துச் சொல்வது சரியானது. ஸ்டாலின் பேச்சை விமர்சனம் செய்வது ஏன் என்பது புரியவில்லை என்று ஸ்டாலினின் பேச்சை ப. சியும் பாராட்டி இருக்கிறார்.
கூட்டணி விரிசல் - டேமேஜ் கண்ட்ரோல்
இந்த பேச்சுக்கள்.. பேரறிவாளன் விடுதலையால் ஏற்பட்ட பிணக்கங்களை சரி செய்யும் விதமாக தற்போது காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினை புகழ்ந்து பேசி வருகிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை பல்வேறு மாநில கட்சிகள் ஓரம்கட்டி வருகின்றன. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, திரிணாமுல், ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் எல்லாம் காங்கிரசுக்கு எதிராக உள்ளன. திமுக மட்டுமே காங்கிரசுடன் இணக்கம் காட்டி வருகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் திமுகவுடன் காங்கிரஸ் மோதுவது சரியாக இருக்காது என்பதால் காங்கிரஸ் இப்படி சுபம் போட்டு பிரச்னையை முடிக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.