பேருக்குதான் எடப்பாடி பொதுச் செயலாளர்.. ஆனால்.. டெல்லியில் சட்டரீதியாக வைக்கப்பட்ட செக்
சென்னை: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்கள்.. ஆனால் கைக்கு எட்டிய அந்த பொருள் கூட கை நழுவி.. கைக்கு எட்டாத தூரத்திற்கு போனால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும்.. எவ்வளவு கோபமாக இருக்கும்? அந்த கஷ்டத்திலும், கோபத்திலும்தான் இப்போது இருப்பார் எடப்பாடி கே பழனிசாமி! அதிமுக பொதுக்குழு வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் வரும் நாட்களில் பெரும் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி "பெயருக்கு" அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தாலும், அவரால் எந்த விதமான முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சார்தான் பொதுச்செயலாளர்.. ஆனால் அவர் போட்டு இருக்குற டிரெஸ் என்னுடையது என்றும் சொல்லும் அளவிற்கு ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட ரீதியாக செக் வைத்து இருக்கிறார்.
ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொதுக்குழு மூலம் இவர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உடனே உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்குதான் தற்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
என்ன அசிங்கம் இது! வெளியான திருச்சி சூர்யா ஆடியோ? யார் அந்த பெண்
வழக்கு
இந்த பொதுக்குழு சட்ட விரோதமாக கூடியதாக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதில் தனி நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது தவறு என்று தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி தரப்பு செய்த மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது சரிதான் என்று தீர்ப்பு வழங்கினார்கள். இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வமும் ஒரு மனுதாரராக சேர்ந்துள்ளார். இந்த பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த வழக்குதான் தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த அதிமுக பொதுக்குழு வழக்கு வேறு அமர்வு மாற்றப்பட்டுள்ளது.. தற்போது வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஷு துலியா அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதில்தான் நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
என்ன நடந்தது?
நேற்று இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் ஒரு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டார். எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இதில் பதில் மனு தாக்கல் செய்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் தனது பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. இந்த பதில் மனுவை தாக்கல் செய்ய தனக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கேட்டு இருந்தார். இதையடுத்து அவருக்கு பதில் மனு தாக்கல் செய்ய 1 வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதோடு வழக்கும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதை எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக எதிர்த்து பார்த்தார்.
எதிர்த்த எடப்பாடி
அதாவது வழக்கை தள்ளி வைக்க வேண்டாம். உடனே விசாரியுங்கள். உடனே வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலே சொன்னது போல கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலைதான் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. எடப்பாடி மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தும், அவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இங்குதான் ஓ பன்னீர்செல்வம் வித்தியாசமான பிளான் ஒன்றை போட்டுள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதன்படி ஓ பன்னீர்செல்வம் இந்த வழக்கை முடிந்த அளவு தாமதப்படுத்த நினைக்கிறார்.
தாமதம்
வழக்கை முடிந்த அளவு தள்ளிப்போட பார்க்கிறார். தாமதம் ஆக ஆக தன்னுடைய கரங்கள் வலுப்படும் என்று அவர் நினைக்கிறார். கடந்த இரண்டு மாதத்தில் நிறைய நிர்வாகிகள், முக்கியமாக மேற்கு மண்டலா நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் வந்துவிட்டனர். இப்போது வழக்கு மேலும் தாமதம் ஆனால் எடப்பாடி மீது அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை இழப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை பற்றி வேறு பேசி சர்ச்சையில் சிக்கிவிட்டார். இதனால் சில மூத்த தலைகள் அப்செட்டில் இருக்கிறாரக்ள்.
எடப்பாடி தவறு
நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி ஆர்வம் இழப்பார். அவரின் வேகம் குறையும் என்று ஓ பன்னீர்செல்வம் இப்படி செய்கிறார் என்கிறார்கள் விவரம் தெரிந்த சட்ட வல்லுனர்கள். இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளர் என்ற பதவி கிடைத்துவிட்டது. ஆனால் சட்ட ரீதியாக அவரின் கைகள் கட்டிப்போடப்பட்டு உள்ளது. கட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பெயருக்கு பதவி இருந்தும் அதிகாரம் இல்லாத நிலைக்கு எடப்பாடி பழனிசாமியை ஓ பன்னீர்செல்வம் கொண்டு வந்துள்ளார் என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்.