சென்னை ஆளுநர் மாளிகையில் இரவில் விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு.. பரபரத்த ராஜ்பவன்! நடந்தது என்ன?
சென்னை: ஆளுநர் மாளிகையில் இரவில் மர்ம பொருள் ஒன்று இறங்கிய நிலையில் அது என்ன பொருள், நடந்தது என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். இங்கு டிசம்பர் 17ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஆளுநர் ரவி வசிக்கும் கட்டடத்தின் பின்புறத்தில் டிரோன் போன்று வடிவத்தில் ஒரு பொருள் தரையிறங்கியது.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள் தமிழக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். பாதுகாப்பு பிரிவிலிருந்து ஒரு டீம் வந்து மெட்டல் டிடெக்டர்கள், மோப்ப நாய்ரள் சகிதம் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தனர். இதையடுத்து மர்ம பொருள் குறித்து தகவல் கொடுத்த சிஆர்பிஎஃப் படையினரிடம் விசாரிக்கப்பட்டது.

சிகப்பு நிறம்
அவர்கள் கூறுகையில் சிவப்பு நிறத்தில் விளக்கு எரிந்த வண்ணம் ஒரு டிரோன் கீழே வந்து விழுந்தது. அதிலும் மேதகு ஆளுநர் தங்கியிருக்கும் கட்டடத்தின் அருகே விழுந்தது என்றனர். இதையடுத்து உளவுத் துறையும் இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதை விசாரிக்க களம் இறங்கியது. அப்போதுதான் அது டிரோன் இல்லை, ஒன்றரை அடி உயரத்தில் உள்ள பாராசூட் என தெரிந்தது. இதனால் போலீஸார் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

பாராசூட்
பாராசூட் இங்கே எதற்காக வந்தது, எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகளை போலீஸார் தங்களுக்குள் எழுப்பி கொண்டனர். பின்னர் விசாரணை நடத்திய போதுதான் உண்மை நிலவரம் தெரிந்தது. மீனம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பருவமழை சீசன்களில் வானிலை பற்றிய ஆய்வுக்காக தினமும் 2 அல்லது 3 பாராசூட்டுகளை ஆய்வுக்காக பறக்க விடுவார்கள்.

பாராசூட்டுகள்
அந்த பாராசூட்டுகள் திரும்ப புறப்பட்ட இடத்திற்கே வராதாம். அது போன்ற பாராசூட்டுகள் எங்காவது போய் விழுந்துவிடுமாம். அப்படித்தான் ஒரு பாராசூட் ராஜ்பவனில் போய் விழுந்தது, மற்றொன்று சென்னை ஐஐடி பகுதியில் விழுந்துவிட்டதாம். பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் புதியவர் என்பதால் அந்த பாராசூட்டை அவர் டிரோன் என நினைத்துக் கொண்டாராம். இதனால் பதறி போய் காவல் துறையிடம் தகவல் கொடுத்துவிட்டார்.

பரபரப்பில் ஆளுநர் மாளிகை
சென்னை மாநகர போலீஸாரும் பரபரப்பாகினர். இந்த சம்பவம் அறிந்து ஆளுநர், முதல்வர் ஆகியோர் டென்ஷனிலேயே இருந்தனராம். பின்னர் ராஜ்பவனில் வந்து விழுந்தது டிரோன் இல்லை பாராசூட் என்றும் அது யாருடையது என்றும் தகவல் சொன்னவுடன் ராஜ்பவனும் தமிழக அரசும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது போன்ற மர்ம பொருள் தேவையில்லாத சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.












Click it and Unblock the Notifications