EXCLUSIVE: ரஜினி கமல் இணைந்தால் எல்லா கட்சிகளுக்கும் செம அடி கிடைக்கும்.. செ.கு. தமிழரசன் அதிரடி!
ரஜினியும் கமலும் ஒன்று சேர்வார்கள் என செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்
சென்னை: "ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒருங்கிணைக்க ஒரு மணி நேரம் போதும்.. அதேபோல ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவரது தலைமையில் ஒரு அணியை உருவாக்கினால்... எல்லா கட்சிகளுக்கும்தான் அது நிச்சயம் சரிவை ஏற்படுத்தும்" என்று செ.கு. தமிழரசன் தன்னுடைய ஆணித்தரமான கருத்தை எடுத்து வைத்துள்ளார்!!
Recommended Video
இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன். மூத்த அரசியல்வாதி. 80'களின் இறுதியில் இருந்து இவரது அரசியல் பயணம் துவங்கியது. மறைந்த ஜெயலலிதா மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்தவர். அதேபோல, ஜெயலலிதாவும் இவர் மீது தனிப்பட்ட முறையில் பாசமும், நம்பிக்கையும் வைத்திருந்தவர்.

அதனால்தான் தற்காலிக சபாநாயகராக தமிழரசனை உயர்த்தி அழகு பார்த்தார் ஜெயலலிதா. எப்போது தேர்தல் நடந்தாலும் சரி, செ.கு. தமிழரசனுக்கு என்று ஒரு தொகுதி ஒதுக்கிவிடுவது ஜெயலலிதாவின் வழக்கம். இந்த வழக்கம் அவர் மறையும்வரை மாறவேயில்லை. அவர் மறைந்தவுடன், கட்சி துண்டாடப்பட்டவுடன், செ.கு. தமிழரசனுக்கு அதிமுக மீதான ஈர்ப்பு குறைந்தது.
கடந்த எம்பி தேர்தலின்போது, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தார்.. கட்சி சார்பில் உறுப்பினர்களையும் நிறுத்தி களம் கண்டார். இந்நிலையில், நேற்று ரஜினியை திடீரென சந்தித்து பேசியுள்ளார்.. சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக சொல்லப்பட்டது. மேலும், அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை செய்ததாகவும் தகவல் வெளியானது.
பல்வேறு தரப்பினரையும் ரஜினிகாந்த் சந்தித்து வாக்குகளை அள்ள குறி வைத்துள்ள நிலையில், செ.கு. தமிழரசனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.. அந்தவகையில், "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக செ.கு.தமிழரசனிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.. ரஜினி சந்திப்பு குறித்த விவரங்களையும் கேட்டோம்.
கேள்வி: ரஜினிகாந்த்தை நீங்கள் திடீரென சந்தித்து பேசியதன் நோக்கம் என்ன?
வெகுஜன மக்களிடையே செல்வாக்கு பெற்ற திரைக்கலைஞர் ரஜினிகாந்த். இதைதவிர பெண்களிடத்திலும் அவருக்கு குறிப்பிடத்தகுந்த ஆதரவு உண்டு.. அதையும்விட அவர் எளிய மனிதர்.. எப்போதுமே இயல்பாக பழகக்கூடியவர்.. அடிக்கடி அவரை நான் சந்தித்து பேசுவது வழக்கம்... முடிந்தவரை எங்கள் கருத்துக்களை பரிமாறி கொள்வோம்.. மரியாதை நிமித்தமான சந்திப்புகளையும் அடிக்கடி நிகழ்த்துவோம்.. அந்த வகையில்தான் நட்பு ரீதியாக, நேற்று சந்தித்து பேசினேன். அவ்வளவுதான்!
கேள்வி: கட்சி தொடங்குவதற்கு முன்பே ஜாதி கட்சிகளை குறி வைத்து ரஜினி தரப்பு காய் நகர்த்துவதாக சொல்லப்படுகிறது.. இந்நிலையில் அவர் உங்களையும் சந்தித்துள்ளார்.. இதை எப்படி எடுத்து கொள்வது?
அவரை அப்படி ஒரு குறுகிய எண்ணத்தில் அணுக முடியாது.. அது சரியா இருக்காது.. இன்னும் சொல்லப்போனால் அவருக்கு எல்லா சமூகத்திலும் சாதாரண மக்களிடையே, நிரந்தர செல்வாக்கு இருக்கிறது.. இதை யாரும் மறுக்க முடியாது.. 30 ஆண்டு காலமாகவே இது அவருக்கு இயல்பாகவே அமைந்த ஒன்று.. வலுவான செல்வாக்கு பரந்துவிரிந்து இருக்கும்போது, அவரை குறிப்பிட்ட அளவுகோலுக்குள் குறைந்து மதிப்பிடவும் கூடாது.. அதேபோல என்னுடையதும் ஒரு அரசியல் கட்சி.. ஒடுக்கப்பட்ட, தலித் மக்களுக்கான அரசியல் கட்சி.. வெகு மக்களுக்கான கட்சி.. அதிலும் உழைக்கும் மக்களுக்கான கட்சி.. அதனால் இருவரின் சந்திப்பையும் குறைந்த மதிப்பீட்டில் நோக்கிடவோ அணுகவோ கூடாது.
கேள்வி: கடந்த எம்பி தேர்தலின்போது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சென்று சந்தித்து கூட்டணி வைத்தீர்கள்? இப்போது ரஜினியை சந்தித்துள்ளீர்? நீங்கள் யாருக்கு ஆதரவு தருகிறீர்கள்? தற்போதைய உங்கள் நிலைப்பாடு என்ன?
அதிமுகவானது, பாஜகவினுடைய ஒரு சார்பு ஆட்சியா, சார்பு இயக்கமா தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயலாற்றி வருகிறது.. அதற்குபிறகு திமுகவை பொறுத்தவரை, நிறைய முரண்பாடுகள் இருக்கு.. இப்படி இருக்கும்போது ஒரு மாற்று அரசியல் தமிழகத்தில் வரணும் என்று நினைத்து மய்யத்துக்கு ஆதரவு தெரிவித்தோம்.. போட்டியிட்டோம்.. நான் போட்டியிடல.. என் கட்சி தோழர்கள் போட்டியிட்டார்கள்.. இப்போதும் அதே மாதிரியான வலுவான, வெற்றி தரக்கூடிய அணியாக மாற்றணும்.. அந்த அணிக்கு தலைமையேற்பதற்கு அவர் அரசியலுக்கு வருவாரானால், அந்த தலைமைக்கு ஒரு வரவேற்பு இருக்கும், அந்த தலைமையானது சாமான்யர் மக்களின் அணியாக இருக்கும் என்ற உணர்வோடுதான் நாங்கள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
கேள்வி: நீண்டநாளாக தமிழகத்தை பீடித்து வரும் கேள்வி.. ரஜினியும் - கமலும் அரசியலில் ஒன்றாக சேருவார்களா?
அவர்கள் இருவரும் எப்போதுமே நெருங்கிய நண்பர்கள்... அவர்களை ஒருங்கிணைக்க ஒரு மணி நேரம் போதும்.. பெரிய அன்பர்கள்.. திரையுலகில் எதிரும் புதிருமா இருக்கும்போதே அவர்கள் நெருங்கிய நண்பர்கள்.. அரசியலுக்கு வருகிறபோது அதற்கு வாய்ப்பு இல்லை என்று எப்படி சொல்லிவிட முடியும்?
கேள்வி: ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவரது முதல் டார்கெட் அதிமுகவா? திமுகவா?
அவர் கட்சி ஆரம்பித்தால், அவரது தலைமையில் ஒரு அணியை உருவாக்கினால் அது எல்லா கட்சிகளுக்கும்தான் பெரிய சரிவை ஏற்படுத்தும்... அதுல என்ன சந்தேகம்?" என்றார் உறுதியுடன்!












Click it and Unblock the Notifications