சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல் வைக்க முயற்சி.. சுத்து போட்ட ஊழியர்கள்.. பல்லாவரத்தில் பரபரப்பு
சென்னை: சென்னையை அடுத்த பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைக்க வந்த நிலையில், அவர்களை உள்ளே நுழையவிடாமல் கடையின் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் சரவணா செல்வரத்தினரம் ஸ்டோர் பிரம்மாண்டமான முறையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. வேல்ஸ் பல்கலைக்கழக இணைப்பு சாலையை அடுத்து குரோம்பேட்டை ஏரிக்கு முன்பாக அமைந்துள்ள இந்த தனியார் துணிக்கடை நிறுவனம் கடந்த ஆறுமாதங்களாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி செயல்படுகிறது.

இந்த நிறுவனம் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி மின்சாரம் இதுவரை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் இந்நிறுவனம் ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால் தங்களுக்கு மாசு ஏற்படுவதாக அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டினர். மேலும் மாசு ஏற்படுவது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கு புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் பேரில் இன்று காலை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல்லாவரம் ரேடியல் சாலைக்கு வந்தனர். அங்கு செயல்பட்டு வந்த சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தை மூடி சீல் வைக்கப்போவதாக கூறினார்கள்.
அப்பொழுது ஊழியர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் மேலாளர் உள்ளிட்டோர் இங்கு சீல் வைக்க உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் இருக்கிறது. எனவே சீல் வைக்க வேண்டாம் என வழிமறித்தனர்.

இதனையடுத்து சீல் வைக்கவிடாமல் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடையின் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பல்லாவரம் தாசில்தார் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பல்லாவரம் ரேடியல் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது .இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்ததால் பதற்றம் தணிந்தது.












Click it and Unblock the Notifications