சோதனை மேல் சோதனை.. விட்டுக்கொடுக்காம பேசியும் ஏமாற்றிய ஈபிஎஸ்..? வேதனையில் ‘சீனியர்’ புள்ளிகள்!
சென்னை : ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்தவருக்கு சீட்டும் கிடைக்கவில்லை, கட்சியின் பொருளாளர், அவைத்தலைவர் பதவியும் கிடைக்கவில்லை, இப்போது தலைமை நிலைய செயலாளர் பதவியும் கிடைக்கவில்லை என்பதால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
Recommended Video
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை நியமித்துள்ளார். மேலும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக பொன்னையன், தலைமை நிலையச் செயலாளராக எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு பெயர்கள் இடம்பெறாதது அவர்களது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சியைல் ஆழ்த்தியுள்ளது.

ஒற்றைத் தலைமை
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின்போது வெடித்த ஒற்றைத் தலைமை விவகாரம் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தது. பின்னர், எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆனார். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிடப்பட்டது.

பதவிகள் பறிப்பு
ஏற்கனவே ஓபிஎஸ்ஸின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும், அவர் வகிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியைப் பறிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

பொருளாளர் பதவி
ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருளாளர் பதவி ஜெயக்குமாருக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஜெயக்குமார் நிதி அமைச்சராகவும் இருந்தவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வெவ்வேறு துறைகளில் அமைச்சராகவும், சபாநாயகராகவும் பணியாற்றியவர். தற்போது எம்.எல்.ஏவாக கூட இல்லை. ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டு அவர் முட்டிமோதியும் வழங்கப்படவில்லை. அதற்கு ஒருவகையில் ஓபிஎஸ் காரணம் என்பதால் அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார் ஜெயக்குமார். இதன் காரணமாக அவருக்கே பொருளாளர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

முதல் சாய்ஸ்
எடப்பாடி பழனிசாமியின் குரலாக முன்னணியில் நின்று பேசக்கூடியவர் ஜெயக்குமார். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து எடப்பாடி அணியில் இருந்து முதன்முதலில் வெளிப்படையாக பேசியதும் இவர்தான். ஒற்றைத் தலைமை விவாதம் குறித்து பொதுவெளியில் தெரிவித்து, இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணகர்த்தராகவும் ஜெயக்குமார் இருந்திருக்கிறார். எனவே, எடப்பாடி பழனிசாமியின் முதல் சாய்ஸாக ஜெயக்குமார் இருப்பதாக கூறப்பட்டது.

மிஸ் ஆனது
ஆனால், அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஜெயக்குமாருக்கு பதவி கொடுக்கப்படாமல் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவி அளிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்னதாக, ஜெயக்குமாருக்கு அவைத்தலைவர் பதவி தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ் மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவர் ஆக்கப்பட்டார். பொருளாளர் பதவியும் கைவிட்டுப் போனதால் ஜெயக்குமாரே அதிருதி அடைந்ததாக கூறப்பட்டது.

புதிய நிர்வாகிகள் நியமனம்
இந்நிலையில், இன்று அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக துணை பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக பொன்னையன், தலைமை நிலையச் செயலாளராக எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைப்புச் செயலாளர்கள்
செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், ராஜன் செல்லப்பா மற்றும் பால கங்கா ஆகியோர் அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நியமிக்கப்பட்டுள்ள முக்கிய பதவிகளுக்கான பட்டியலிலும் ஜெயக்குமாருக்கு இடம் கிடைக்கவில்லை.

ஆதரவாளர்கள் டென்ஷன்
ஓபிஎஸ் வகித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியும், ஜெயக்குமார் எம்.எல்.ஏ இல்லை என்பதால் அவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அதுவும் வேறொருவருக்குத்தான் கிடைக்கும். ஜெயக்குமாருக்கு ராஜ்யசபா எம்.பி சீட், அவைத் தலைவர், பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் என நம்ப வைத்து ஏமாற்றி விட்டனர் என ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் குமுறத் தொடங்கியுள்ளனர்.

செங்கோட்டையன் ஆதரவாளர்களும் அப்செட்
அதேபோல, இந்த முக்கிய பதவிகள் லிஸ்ட்டில் செங்கோட்டையனின் பெயரும் மிஸ் ஆகியுள்ளது. இது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் சீனியரான செங்கோட்டையன், 9 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதா ஆட்சியில் முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்ஸுக்கு பதிலாக முன்வைக்கப்பட்ட பெயர்களில் முதன்மையானது செங்கோட்டையன் பெயர்.

அப்செட்
செங்கோட்டையனுக்கு முக்கிய பதவியை வழங்காமல் எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டுவது செங்கோட்டையன் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ரெடியாகிவிட்டது என்கிறார்கள் ஒரு தரப்பினர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர் என இரண்டு பதவிகளையும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே வைத்திருக்க அனைத்து நிர்வாகிகளும் ஒப்புக் கொள்வார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஜெயக்குமார், செங்கோட்டையன் தரப்பினரை கூல் ஆக்க எடப்பாடி பழனிசாமி எனன் செய்வார் என்று பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications