அடிக்கடி கரண்ட் கட்.. காரணத்தை சொன்ன மின் அதிகாரிகள்.. அதிமுகவை சாடும் திமுக.. விடிவு எப்போது?
சென்னை: 6 மாதங்களுக்கு மேலாக பராமரிப்பு பணிகள் நடக்காத காரணத்தால், அடிக்கடி டிரான்ஸ்பார்மகள், மின் வயர்கள் காற்றில் பழுதடைகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் எல்லா ஊர்களிலும் மின்தடை ஏற்படுகிறது. 5 முதல் 10 நிமிடத்தில் வந்தாலும் பலமுறை மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தமிழக அரசு உடனடியாக பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து, மின்தடை பிரச்சனையை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. மின்சார உற்பத்தியில் பிரச்சினை இல்லை. ஆனால் மின்சாரத்தை கொண்டு செல்லும் மின்சாதனங்கள் கட்டமைப்பில் பிரச்சினை என்று புகார் எழுந்துள்ளது. மின் சாதனங்கள் பழுதடைந்து போனதற்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததே காரணம் என்று மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியே கூறியிருந்தார்.

மின்தடை ஏன்
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மின் பராமரிப்பு பணிகள் கொரோனா ஊரடங்கு முடியும் வரை மேற்கொள்ளப்படாது என்று வெளிப்படையாகவும் அறிவித்தார். அதாவது மின் பராமரிப்பு பணிகளுக்கு அரசு அனுமதி அளிப்பது நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மின் தடை ஏற்படும் பகுதிகளில் மட்டும் மின் தடையை சரிசெய்வதற்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றார்.

கவலை தரும் நிலைமை
ஆனால் நிலைமை கவலை அளிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் உள்ளது. ஒரு நாளைக்கு பல முறை மின்சாரம் கட்டாவது தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. ஐந்து முதல் 10 நிமிடத்தில் வருகிறது என்றாலும், சில இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது மற்றும் போஸ்ட் மரங்களில் காற்று காரணமாக வயர் அறுந்து போவது போன்ற காரணங்களால் மின்சாரம் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கூட வருவது இல்லை.

பழுதான சாதனங்கள்
இந்தநிலையில் மின்சாரம் தடைபடுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இதன்படி, தமிழகம் முழுவதும் 26 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 33 ஆயிரம் இடங்களில் மின் கம்பம் தாங்கும் கம்பிகள் பழுதடைந்துள்ள.. 47 ஆயிரம் மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளன, 38 ஆயிரம் இடங்களில் மின் கம்பங்கள் தாழ்வாக செல்கின்றன. மின்சார வயர்களை தாங்கி நிற்கும் 34 ஆயிரம் பீங்கான இன்க்லேட்டர் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறார்கள். அதாவது 100 துணை மின் நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பராமரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது தான் காரணமாம். பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி கொடுத்தால் 8 மணி நேர மின் தடை வரும் என்பதால், ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும் என்று நினைத்து அதிமுக அரசு அதற்கு மறுத்துவிட்டதாக ஆளும் திமுக தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மக்கள் கோரிக்கை
தற்போதைய நிலையில் மின்தடையை போக்க மிகப்பெரிய அளவில் போர்க்கால அடிப்படையில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் மட்டுமே அடிக்கடி மின்தடை பிரச்சினையை சரிசெய்ய முடியும் என்கிறார்கள் மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள். அரசு உடனடியாக பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி அளித்து அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications