கொஞ்சம் லைட்டா..திடீரென சைலண்ட் மோடுக்கு போயிட்டாரே! எடப்பாடியை விளாசிய டிடிவி தினகரன்! என்ன காரணம்?
சென்னை : நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக திமுக உள்ளிட்ட கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் கட்சிகள் அடுத்தடுத்து பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், பாஜகவின் நெருக்கடியால் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார். டிடிவி தினகரனும் எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது சில நாட்களாக அவர் அமைதி காக்க என்ன காரணம்?
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கிய போது இருந்தே டிடிவி தினகரன் அதில் தலையிடாமல் தானுண்டு, தன் கட்சி வேலை உண்டு என்று இருந்து வந்தார். தமிழகம் முழுவதும் அதிமுக விவகாரம் மிகத் தீவிரமாக பேசப்பட்டு வந்த நிலையில் பாஜக தலைமையும் ஆரம்பத்தில் அமைதி காத்தே வந்தது.
ஆனால் திரை மறைவில் இரு தரப்பையும் இணைக்க அக்கட்சி முயற்சி மேற்கொண்டது. தற்போது இன்னும் சில மாத இடைவெளியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக தலைமை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்றாலும் கூட்டணி, தேர்தல் பிரச்சாரம், ஆலோசனைக் கூட்டங்கள் என தற்போது இருந்து அரசியல் களம் களைகட்டி வருகிறது. தேசிய அளவில் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் பாஜக இந்த முறை எப்படியாவது மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதுவரை காங்கிரஸ் பாஜக அடுத்தடுத்து ஆட்சி அமைத்திருந்தாலும் ஹாட்ரிக் வெற்றி பெற்றதில்லை. இதனால் இந்த முறை கை கூடி வந்திருக்கும் வாய்ப்பை கைவிட்டு விட பாஜக தயாராக இல்லை.

உறுதியாக இல்லை
குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் இமாச்சலப் பிரதேசத்தில் நூழிலையில் கைவிட்டுப் போன வெற்றி பாஜக தலைமையை யோசிக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிடக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தேர்தல் படைத்தளபதியுமான அமித்ஷா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீர் தொடங்கி பல மாநிலங்களில் வெற்றிக்கொடி நாட்டினாலும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பாஜகவால் உறுதியாக நிலைத்து நிற்க முடியவில்லை.

ஏக்கம்
கேரளாவில் காங்கிரஸ் கட்சி தற்போது பரிதாபகரமான நிலையில் உள்ளது. இதே நிலைதான் இந்தியா முழுவதும் இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகம் மட்டும் எப்போதும் தனித்தே நின்று இருக்கிறது மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அல்லது அதிமுக தான் பிரம்மாண்ட வெற்றியை பெற்று வந்திருக்கின்றன. இதனால் இந்த முறை பாஜகவின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் தனித்து செயல்பட முடியவில்லை என்ற ஏக்கம் பாஜகவுக்கு எப்போதுமே உண்டு.

அதிமுகவே பிரதானம்
அதனை அதிமுகவை வைத்தே அரசியல் செய்ய வேண்டிய நிலைமை தற்போது வரை நீடிக்கிறது இந்த நிலையில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் கட்சிக்கு மட்டும் அல்லாமல் பாஜகவுக்கும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் இபிஎஸ் மட்டுமல்லாது சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் ஒன்றிணைக்க வேண்டும் என அக்கட்சி இணைக்கிறது பாஜக தலைமையின் ஆதரவோடு டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைய தயார் என அறிவித்தார். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன்படவில்லை. இதனால் இருவருக்கும் இடையேயான வார்த்தை மோதல் வெடித்தது .இதனால் பாஜக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.

டிடிவி தினகரன்
இந்த நிலையில் ஆரம்பத்தில் எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன் கடந்த சில நாட்களாக அமைதி காத்து வருகிறார். பொதுவெளியில் தொடர்ந்து பேசினால் இருவருக்கும் இடையேயான இடைவெளி மேலும் அதிகரிக்கும் என்பதால் தற்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச வேண்டாம் என டிடிவி தினகரனுக்கு வலியுறுத்தப்பட்டதாகவும் இதன் காரணமாகவே அமைதியாக இருக்கிறார் என்கின்றனர். இது குறித்து பேசி உள்ள முக்கிய நிர்வாகி ஒருவர்," எது எப்படி எனினும் தேர்தல் நேரத்தில் எதிர்பார்த்த கூட்டணி நிச்சயம் அமையும். எனவே இடைப்பட்ட காலத்தில் தனி மனித விமர்சனங்கள் கூட்டணி குறித்தான வாய்ப்புகளை மிகவும் குறைக்கும் என்பதால் அதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே சில நாட்களாக அவர் சைலண்ட் மோடுக்கு சென்று இருக்கிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications