என் பெயரை யூஸ் பண்ண கூடாது.. சீறிய விஜய்.. அப்பா, அம்மாவிற்கு எதிராக வழக்கு.. நடந்தது என்ன?
சென்னை: நடிகர் விஜய் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
Recommended Video
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருக்கிறது. விஜய்யின் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்தி சுயேட்சையாக மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட உள்ளனர். இதற்கான முடிவு நேற்று பனையூரில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்று நடிகர் விஜய் கொடுத்த அனுமதியின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் விஜய் நேரடியாக எங்கும் பிரச்சாரங்கள் செய்ய மாட்டார், அரசியலில் ஈடுபட மாட்டார். புகைப்படம், கொடியை பிரச்சாரத்தில் பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விஜய் வழக்கு ஏன்?
இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் நடிகர் விஜய் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா ஆகியோருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 27ஆம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு இப்போது தொடக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் எடுத்த முடிவிற்கும் இதற்கும் தொடர்பும் இல்லை. இந்த வழக்கு ஏப்ரல் மாதமே தொடுக்கப்பட்டது ஆகும்.

ஏப்ரலில் நடந்தது என்ன?
கடந்த வருடம் விஜயின் ரசிகர்களை வைத்து அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சி தொடங்கப்பட உள்ளதாகவும், இதன் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. அதோடு இதை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில் இதற்கு கடுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

மறுப்பு
கடந்த ஆண்டு நவம்பரில் இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது. அதன்பின் சில மேடைகளில் எனக்கும் என் மகனுக்கும் பிரச்சனை இருக்கிறது. நாங்கள் பேசிக்கொள்வது கிடையாது. எங்கள் குடும்ப பிரச்சனை இது என்று எஸ்.ஏ. சந்திரசேகர் சில மேடைகளில் விஜய் குறித்து வெளிப்படையாக பேசி சர்ச்சைகளில் சிக்கினார்.

சர்ச்சை
இந்நிலையில்தான் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி விஜய் வழக்கு தொடுத்தார். தனது பெயரை வைத்து தேவையின்றி அரசியல் கட்சிகள் தொடங்கப்படுவதை விரும்பாமல் விஜய் இப்படி வழக்கு தொடுத்து இருந்தார். சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சார்பாக கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

யார் மீது?
நடிகர் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் சங்கங்களின் பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் எஸ்.ஜெ.ஜெகன், முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார், முத்து, விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் கே.பாரதிதாசன், இன்பண்ட் யோகராஜ், எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினரும், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆர். பத்மனாபன், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரன எஸ்.ஏ.சந்திரசேகர் (தந்தை), அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொருளாளர் ஷோபா சேகர் (தாய்), தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் கே. ஜோஸ்பிரபு, மதுரை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் முனிச்சாலை ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

விசாரணை
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகவில்லை.

சிக்கல்
விஜய் தரப்பில் யாரும் ஆஜராகாத காரணத்தால் வழக்கை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதோடு அந்த பதில் மனுக்களை எதிர் மனுதாரர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 27ம் தேதி விஜய் தனது அப்பா, அம்மாவிற்கு எதிராக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications