பொது சின்னம் இல்லை.. விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் பெற்ற வெற்றி வெறும் கானல் நீரா?
சென்னை: 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
அடுத்த லோக்சபா தேர்தலிலேயே விஜய் புதுக் கட்சி ஆரம்பித்து களத்திற்கு வர வேண்டும் என்று நேற்று முதல் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் சீரியசாகவே கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
இது உண்மைதானா.. விஜய் அரசியலுக்கு வருவதற்கான களம் உண்மையிலேயே தமிழகத்தில் இருக்கிறதா..

110 இடங்கள்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என்று 23,978 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இவற்றில் 110 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளனர் விஜய் மக்கள் மன்றத்தினர்.

விஜய் பெயரை பயன்படுத்தினார்கள்
விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேர்தலில் நின்றதாலும் எனவே இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறுகிறார்கள். 109 இடங்களில் 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார், அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

விஜய்க்கு செல்வாக்கு
தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் சரவணன் அளித்துள்ள பேட்டியொன்றில், உள்ளாட்சியில் 169 இடங்களில் போட்டியிட்டதாகவும் 110 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும், 2019 உள்ளாட்சித் தேர்தலில் 32 மாவட்டங்களில் சுயேச்சையாக கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் போட்டியிட்டபோது 135 பேர் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வர நேரம் வந்து விட்டதா
அதேநேரம், இது விஜய்க்கு கிடைத்த வெற்றியா, விஜய் மாநில அரசியலில் நேராக நுழைய நேரம் வந்து விட்டதா என்று மூத்த அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அப்படியில்லை என்கிறார்கள் ஆணித்தரமாக. ஏனெனில் சுயேச்சைகளாகத்தான் இவர்கள் களமிறங்கியுள்ளனர். பொது சின்னமும் இவர்களுக்கு கிடையாது. எனவே இவர்கள் பெற்ற வெற்றியை விஜய்க்கு கிடைத்த வெற்றி என்பது தவறான தகவல் என்கிறார்கள். இதையேத்தான் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனக்கே உரித்தான பாணியில் தெரிவித்தார். அவரவர் சொந்த செல்வாக்கால் வெற்றி பெற்றிருக்கலாமே தவிர, நாம் தமிழர் வேட்பாளர்களை விட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் களமிறங்கியவர்கள் அதிகம் வென்றதாக கூறுவது சரியில்லை என்றார் அவர்.

கமல்ஹாசன் கட்சி நிலை
உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்த்து விட்டு விஜயகாந்த் அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால் இப்படி சுயேச்சைகளாக நின்றவர்கள் வெற்றியை தனது வெற்றி என விஜய் நினைத்து அரசியலுக்கு வந்தால், கமல்ஹாசன் கட்சிக்கு கிடைத்த கதிதான் கிடைக்கும் என்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள்.

மிக குறைவு
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ள நிலையில், 110 இடங்களில் மட்டுமே வெவ்வேறு சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளனர். இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. மேலும், ஆளும் கட்சிக்கு எதிராக அதிருப்தி அலை என்பதே இல்லை. அப்படி இருந்தால் திமுக இவ்வளவு பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்க முடியாது. ஆளும் கட்சிக்கு எதிராக அதிருப்தி அலை இருந்தால்தான் புதிதாக ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுவோம் என்று மக்கள் நினைக்க வாய்ப்பு உண்டு. விஜயகாந்த் விஸ்வரூபம் எடுத்தது இப்படித்தான். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரது ஆட்சியையும் மாற்றி மாற்றி பார்த்து அதிருப்தியிலிருந்த ஒரு குரூப் மக்கள் விஜயகாந்த் பக்கம் வந்தனர். ஆனால் அப்படியான அதிருப்தி இப்போது இல்லை.

அரசியல் அதிருப்தி இல்லை
ஒருவேளை அப்படி இருந்திருந்தால் அதிமுகவுக்கோ அல்லது, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற ஏற்கனவே களத்தில் உள்ள கட்சிக்கு ஓட்டு பிரிந்திருக்கும். அப்படி நடக்கவில்லை. மேலும் அதிமுக பலவீனமாகிவிட்டதாக நினைத்தும் விஜய் களத்திற்குள் வருவது சரியாக இருக்காது. 10 வருடங்களாக தொடர்ந்து ஆட்சியிலிருந்தபோதிலும், ஜெயலலிதா இல்லாத போதிலும், எடப்பாடியை முன்னிறுத்தி வாக்குகளை பெற்று பலமான எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது அதிமுக. எப்போது திமுக தடுமாறினாலும், எகிறி விஸ்வரூபம் எடுக்க அதிமுக தயாராகவே உள்ளது. வரலாற்றில் அப்படித்தான் இதற்கு முன்பு பல முறை நடந்துள்ளது. எனவே இந்த சமூக வலைத்தள கோஷங்களை பார்த்து அரசியல் களத்திற்குள் விஜய் வராமல் இருப்பதுதான் அவருக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் நல்லது என்கிறார்கள் உறுதியாக.












Click it and Unblock the Notifications