ஒரே வீடியோ.. முதல்வர் ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்.. பிளானில் இறங்கிய திமுக.. கை கொடுக்குமா இன்று ரிசல்ட்
உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னெடுத்த செயல்பாடுகள் மிகுந்த கவனத்தை பெற்றன
சென்னை: உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் என்னவாகும் என்பது ஒருபுறமிருந்தாலும், திமுக இந்த 2 மாதங்களில் எடுத்த களமுன்னெடுப்புகள் மிகுந்த கவனத்தை பெற்றாலும், அது இன்றைய தினம் கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது.
அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 70.51 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஸ்டாலின் Vs எடப்பாடி.. 3 அஸ்திரங்களுடன் களமிறங்கிய அதிமுக.. கிராமப்புற ஓட்டுக்கள் கைகொடுக்குமா?
வியூகங்கள்
74 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது... இந்த தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த 2 தினங்களாகவே எழுந்து வருகிறது. இந்த தேர்தலுக்காக திமுக எடுத்த வியூகங்கள் முக்கிய கவனத்தை பெற்று வருகின்றன.
அதிமுக
பொதுவாக, உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்கள் என்றாலே ஆளும் தரப்புதான் பெரும்பாலும் வெற்றி பெறும்.. அந்த வகையில், திமுக ஆளும் கட்சியாக உள்ளதால், வெற்றி வாய்ப்பை பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.. குறிப்பாக, பெரும்பாலான இடங்களை கைப்பற்றி அதிமுகவுக்கு சறுக்கலை ஏற்படுத்திவிட வேண்டும், அதன்மூலம் திமுகவின் பலத்தை பெருக்க வேண்டும் என்ற முயற்சியை கையில் எடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, திமுகவுக்கு இது கவுரவ பிரச்சனையாகவும் பார்க்கப்பட்டது.
காங்கிரஸ்
கூட்டணியுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் இட ஒதுக்கீடுகளில் அதிருப்தியும் ஏற்பட்டது.. கூட்டணி கட்சிகளுக்கு மிக குறைவான இடங்களை திமுக ஒதுக்கியதால், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்தன என்றும் செய்திகள் வந்தன.. அத்துடன் காங்கிரஸ் கட்சி இதுகுறித்து தங்கள் கட்சி மேலிடத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரபரத்தன.
பிரச்சாரம்
ஆனால், திமுகவோ அசரவே இல்லை.. 9 மாவட்ட குழு தலைவர்கள், 74 ஒன்றிய தலைவர்கள், 2,901 ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் மொத்தமாக கைப்பற்ற, ஆளுங்கட்சி திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டது... மற்றொரு புறம் இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவில்லை... மாறாக, ஒரே ஒரு வீடியோவை மட்டும் பதிவிட்டிருந்தார்.. அதில், "சட்டசபை தேர்தலை போல, உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு தர வேண்டும்" என்று மட்டும் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார்.
வாக்குறுதிகள்
எனினும், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரச்சாரத்தில் தெரிவித்த அத்தனை புகார்களுக்கும் உடனுக்குடன் திமுக தரப்பில் பதிலடி தந்து கொண்டே இருந்தனர்.. திமுக மக்களுக்கு தந்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி குற்றஞ்சாட்டினால், "யார் சொன்னது? 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன.. அடுத்த வாக்குறுதிகள் விரைவில்" என்று திமுக தரப்பு பதிலடி தந்தது...
புது ரூட்
இதனால் திமுகவின், நீட் தேர்வு ரத்து வாக்குறுதி, கூட்டுறவு கடன் குளறுபடி போன்றவற்றை வைத்து அதிமுக வேறு ரூட்டில் பிரச்சாரத்தை கையில் எடுத்தது... அதற்கும் திமுக தரப்பில் இருந்து அறிக்கைகளும், பேட்டிகளும், ட்வீட்களும் வெளியாகி கொண்டே இருந்தன... அதாவது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக பிரச்சாரம் செய்தால், என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று திமுக பிரச்சாரம் செய்தது.. முதல்வர் ஸ்டாலின் இதற்காகவே ஒரு ட்வீட் பதிவு போட்டு லிஸ்ட் போட்டிருந்தார்.
செல்வாக்கு
இது எல்லாவற்றிற்கும் மேலாக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகள் நிறைந்திருப்பதால், 10.5 சதவிகித இடஒதுக்கீடு அரசாணை தங்களுக்கு கை கொடுக்கும் என்று திமுக நம்பிதான் களமிறங்கியது. அதேநேரம், ஒரே மாவட்டத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதும் திமுகவுக்கு வெற்றி தரக்கூடிய சாதகமான விஷயமாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்திருந்தனர். ஒருவேளை பாமக திமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடுமோ? அப்படி வைத்தால் அது மேலும் வெற்றியை எளிதாக பெற்று தருமே என்ற கணக்குகளும் போடப்பட்டன.
கொலச்சேரி
ஆனால், பாமக தனித்து போட்டி என்றதுமே, திமுக முழு வீச்சில் இறங்கியது.. இதற்காக அதிமுகவை போலவே, திமுக வேட்பாளர்களும், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களையும், பணத்தையும் வாரி வாரி இரைத்த நிகழ்வுகளும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்தது.. அதிலும் காஞ்சிபுரம் மாவட்டம் கொல்ச்சேரியில், திமுகவினர் வாக்காளர்களுக்கு இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று தங்க மூக்குத்திகளை பரிசாக கொடுப்பதாக அதிமுக குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டமே செய்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
தேர்தல்கள்
இப்படியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவின் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றியை பொறுத்தே, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. அதற்கான வேலைகளையும் இப்போதே முடுக்கிவிடவும் ஆரம்பித்துள்ளது.
செல்வாக்கு
அதுமட்டுமல்ல, இந்த முறை பிரச்சாரத்தில் உள்ளூரில் சர்ச்சைகளில் சிக்காத, மற்றும் செல்வாக்கு மிக்கவர்களையே களமிறக்க முதல்வர் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்.. கடந்த சட்டசபை தேர்தலில் எழுந்த புகார்கள் போல எதுவும் களத்தில் நடந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாகவே இருந்தார்.. அதேசமயத்தில் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லவும் திமுக தலைமை முக்கிய நிர்வாகிகளுக்கும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்...இந்த 9 மாவட்டங்களில் பெறக் கூடிய வெற்றிதான், அடுத்து வரக் கூடிய மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்று திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருந்ததம் நினைவுகூரத்தக்கது.