ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் ‘அஸ்திரம்’.. இரட்டை இலை அவருக்கா? சான்ஸே இல்லையாம்! விளக்கும் பத்திரிகையாளர்
உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு முடிவை எடுத்தால் அது பிரதான வழக்கின் தீர்ப்பையே அர்த்தம் இல்லாததாக்கி விடும் என பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக வழக்குகளைப் பொறுத்தவரை கடைசியாக வந்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமானது, அதன் அடிப்படையில் ஈபிஎஸ் அணிக்கு இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு நமது ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் விளக்கம் அளித்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தங்கள் தரப்புக்கே இரட்டை இலை சின்னம் வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதற்கு எதிராக ஓபிஎஸ்ஸும் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதனால், யாருக்கு இரட்டை இலை கிடைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ளார் பத்திரிகையாளர் ப்ரியன்.
'தனி கேம்’.. எடப்பாடியின் சாதுர்யம்.. ஃபைட் அவங்க கூட இல்லயாம்! டெல்லிக்கு சொன்ன சேதி! ப்ரியன் பளிச்
எடப்பாடி வாக்கு குறைந்தால்
கேள்வி : ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ்ஸை விட அதிக வாக்குகள் பெற்று அதிமுகவை கைப்பற்ற நினைக்கிறார் எடப்பாடி. அதேசமயம், கடந்த தேர்தலை விட அதிமுக வாக்குகள் குறைந்தால், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை என குழப்பம் செய்ததால் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டது என்ற பேச்சை ஓபிஎஸ் கிளப்புவாரே?
பதில் : நிச்சயமாக செய்வார். 2019ல் இருந்து தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது அதிமுக. இப்போது நாம் ஒன்றுபட்டிருந்தால் வென்றிருப்போம், எடப்பாடி பழனிசாமியின் ஈகோவால் இன்று அதிமுகவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. கட்சியை தான் ஒற்றை ஆளாக கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அதிமுகவை மண்ணைக் கவ்வ வைத்துவிட்டார் என்று ஓபிஎஸ் சொல்வார். ஓபிஎஸ் - தினகரன் - பாஜக மூன்று அணியும் வலிமையாக களமிறங்கி, எடப்பாடி பழனிசாமிக்கு செல்லும் வாக்குகளை இன்னும் குறைத்து டெபாசிட்டை காலி செய்துவிட்டால் ஓபிஎஸ்ஸுக்கு இன்னும் வசதியாகப் போய்விடும். ஒற்றுமையாக இல்லாததால் தான் அதிமுக தோற்றுவிட்டது என ஓபிஎஸ் சொல்வார்.
அண்ணாமலை சொல்கிறார்
ஓபிஎஸ்ஸால், எடப்பாடியை விட அதிகமாக வாக்கு வாங்க முடியாது. ஆனால், எடப்பாடிக்கு செல்லும் வாக்குகளில் எவ்வளவு ஓட்டுகளை குறைப்பது என்பதுதான் ஓபிஎஸ்ஸின் கணக்கு. பாஜக கடைசி வரை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கரம் கொடுப்பார்களா? அல்லது திடீரென ஈபிஎஸ் பக்கம் சாய்வார்களா என்ற ஐயமும் இருக்கிறது. பாஜக அண்ணாமலை, ஆளுங்கட்சியின் பணபலம், படை பலத்தை எதிர்க்க வலுவான வேட்பாளர் வேண்டும் என்று கூறுகிறார். எடப்பாடி தான் திமுகவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார் என்று கூறி அவருக்கு ஆதரவு அளித்தாலும் அளிக்கலாம்.
ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் வரும்
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஓபிஎஸ்ஸை பாஜக கைவிட்டால் அவருக்கு பெரிய பின்னடைவாகும். பாஜக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலோ, தனித்துப் போட்டியிட்டாலோ பிரச்சனை இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு என்ற முடிவை எடுத்துவிட்டால் ஓபிஎஸ் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வார். பாஜகவே வேண்டாம் என்ற குரலும் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறது. ஆனால், அப்படியான முடிவுக்கு எடப்பாடி செல்லவில்லை. இந்த இடைத்தேர்தலில் பாஜக உள்ளே வரக்கூடாது என்ற நிலையில் தான் இருக்கிறார் ஈபிஎஸ்.
சான்ஸே இல்லை
கேள்வி : இரட்டை இலை கோரி உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார் ஈபிஎஸ். கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு, கட்சி அலுவலகம் எல்லாம் எடப்பாடி கையில் இருப்பதால், இரட்டை இலை சின்னமும் அவருக்கு வழங்கப்பட இந்த குறுகிய காலத்தில் வாய்ப்பு இருக்கிறதா?
பதில் : எடப்பாடி தரப்பு இடைக்கால நிவாரணம் கோரியிருப்பதால், உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் பிரதான வழக்கில் தீர்ப்பு வர மேலும் தாமதமாகலாம். இப்போது இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து விட்டால் அடுத்து நன்றாக நேரமெடுத்துக் கொண்டு கூட உச்ச நீதிமன்றம் மெயின் வழக்கில் தீர்ப்பு அளிக்கலாம். ஓபிஎஸ் தான் தான் ஒருங்கிணைப்பாளர் என வாதாடுவார். தேர்தல் ஆணையமும் அதே நிலைப்பாட்டில் இருந்தால், இருவருக்கும் இரட்டை இலை சின்னம் கொடுக்கவேண்டாம் என தனது தரப்பை தெரிவிக்கும். ஆர்கே நகரில் செய்தது போல, தேர்தல் ஆணையம் சுயேட்சை சின்னத்தையே இருவருக்கும் வழங்கலாம் எனச் சொல்லக்கூடும். ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரில் யாருக்காவது இரட்டை இலை சின்னம் கொடுத்தால், அது பிரதான வழக்கின் தீர்ப்பையே அர்த்தம் இல்லாததாக்கி விடும். அதனால், அப்படியான முடிவு எடுக்கப்படாது.
இருவருக்குமே
கேள்வி : கடைசியாக அதிமுக வழக்கில் தீர்ப்பு வந்தது என்று பார்த்தால் ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புதான். அது எடப்பாடிக்கு சாதகமாக இருந்தது. அந்த தீர்ப்பை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் எதுவும் முடிவெடுக்க வாய்ப்புள்ளதா?
பதில் : அப்படியான முடிவை எடுக்கமாட்டார்கள். ஏனென்றால், அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு மட்டும்தான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால், ஐகோர்ட் இரு நீதிபதிகள் தீர்ப்பை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், உச்ச நீதிமன்றம் முழுமையாக விசாரித்த பிறகு அதன் தீர்ப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தேர்தல் ஆணையம் தானாக முடிவெடுத்தாலும் சரி, பாஜக தலையீடு இருந்தாலும் சரி, இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே கிடைக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு பேட்டியில் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் ப்ரியன்.