அதிமுக ஆதரவு.. திமுக, காங், கட்ட கடைசியில் பாஜக.. இந்த முறையாவது வெல்வாரா குஷ்பு?
சென்னை: சென்னையில் ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு, நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக, 20 இடங்களில் போட்டியிட்டது. அதில் சென்னையில் ஆயிரம்விளக்குத் தொகுதியும் ஒன்றாகும்.

திமுகவின் கோட்டை
பழமையான தொகுதியான இது திமுகவின் கோட்டையாகும். இங்கு நிறைய முறை திமுக வென்றுள்ளது. இந்த நிலையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில் குஷ்பு சுந்தர் போட்டியிட்டார். வேட்பாளராக அறிவித்த மாத்திரத்தில் தொகுதியில் தீயாய் இறங்கி வேலை பார்த்தார்.

திட்டங்கள்
பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் குறித்து தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த திட்டங்கள், வழங்கிய நிதியுதவி குறித்தும் மக்களுக்கு புரியவைத்தார். தொகுதியில் ஒரு சந்து பொந்து கூட விடாமல் அனைத்து இடங்களிலும் பம்பரமாக சுற்றினார்.

அபிப்ராயம்
இந்த நிலையில் நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகளில் அவர் வென்றதாக அறிவிக்கப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் உள்ளார். குஷ்புவை எடுத்துக் கொண்டால் சினிமா பிரபலம், அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். தவறு என்றால் தட்டி கேட்பவர் என்பதால் அவர் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது.

திமுக- காங்கிரஸ்
ஆனால் சீட் தரவில்லை என்பதால் திமுகவிலிருந்து காங்கிரஸுக்கும் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கும் குஷ்பு மாறியதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் காங்கிரஸில் இருந்த போது பிரதமர் மோடியையும் மற்ற அமைச்சர்களையும் இவர் விமர்சனம் செய்திருந்தார்.

வெற்றி பெறுவாரா
அது போல் மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்து விட்டு தற்போது அவரது திட்டங்கள் அனைத்தும் நல்லது என பிரச்சாரம் செய்தது எடுபடுமா இல்லையா என்பது நாளை வெளியாகும் முடிவுகளில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications