அரசு பஸ்சில் இனி ஆண்களுக்கும் இலவசம்? சட்டசபையில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் சொன்ன தகவல்
சென்னை: தமிழகத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் ‛விடியல் பயண திட்டம்' நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் வழியாக பெண்கள் மாநிலம் முழுவதும் பயன்பெற்று வருகின்றனர். அதேபோல் ஆண்களுக்கும் ‛விடியல் பயண திட்டம்' கொண்டு வர வேண்டும் என்று திருவாடானை காங்கிரஸ் எம்எல்ஏ கருமாணிக்கம் கேட்ட கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சொன்ன பதில் கவனம் பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் ‛விடியல் பயணம்' என்ற பெயரில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்த திட்டத்தை திமுக ஆட்சியை பிடித்தவுடன் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழக சட்டசபையில் இன்று கூடியது. துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வரும் சூழலில் கேள்வி நேரம் நடந்தது. அப்போது எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு ஒவ்வொரு அமைச்சர்களும் பதிலளித்தனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ கருமாணிக்கம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேள்வி கேட்டார். அதாவது, ‛‛பெண்களுக்கு முதல்வர் விடியல் பயணம் கொடுத்தது போல், ஆண்களுக்கும் விடியல் பயணம் கொடுப்பீர்களா?'' என்று சிரித்தபடி கேள்வி கேட்டார். அவரது கேள்விக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆண்களை பொறுத்தவரை இலவச பயணம் என்ற உங்களின் ஆர்வம் வரவேற்கத்தக்கது. இருந்தாலும் இதுவரை ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றவர்கள் பெண்கள். அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் தர வேண்டும் என்பதற்காக தான் விடியல் பயணம், கலைஞர் உரிமை தொகை போன்ற திட்டங்களை முதல்வர் தந்துள்ளார். வாழ்க்கையில் சமநிலை வருவதற்கு பெரியார் காட்டிய வழியில் பணியாற்றி கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் அரசின் நிதிநிலைமை சீராகும் பட்சத்தில் இதுவும் கவனத்தில் எடுத்து கொள்ளப்படும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications