செந்தில் பாலாஜிக்கு போன நல்ல செய்தி.. ஜாமீனில் விடுதலை ஆக வாய்ப்பு? கோர்ட்டில் நடந்த பரபரப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு செந்தில் பாலாஜி வழக்கில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றமும் மறுத்து விட்டது. மேலும், ஜாமீன் மனுவை தாம் விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறும் சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டு, அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார். அப்போது இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என கூறினார்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் என செந்தில் பாலாஜி தரப்பில் முறையிடப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு என நீதிபதிகள் கூறியுள்ளனர். அனைத்து கோப்புகளையும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கே மாற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி மத்திய அரசால் முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமாக அறிவித்த அரசாணை மத்திய அரசு சட்டத்துக்கு மேலானது அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் எனவும், வழக்கை மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஜாமின் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி மனு மீது நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில்; விடுதலை செய்யப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
வழக்கு: சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications