முருகன் பாதியில் விட்டுட்டு போன "அசைன்மென்ட்".. அண்ணாமலை மட்டும் கையில் எடுத்தால்.. என்ன நடக்கும்?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த போது எல். முருகன் சில முக்கியமான பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது தலைவர் பொறுப்பிற்கு அண்ணாமலை வந்திருக்கும் நிலையில், எல். முருகன் விட்டுச்சென்ற பணிகளை அவர் கவனிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சர் ஆகி இருக்கிறார்.
பாஜக விதிப்படி கட்சியில் ஒரு நபர் ஒரு உயர் பதவியில் மட்டுமே இருக்க முடியும். இதனால் எல். முருகனுக்கு பதிலாக அண்ணாமலை தற்போது பாஜக தலைவராக புரோமோஷன் பெற்றுள்ளார்.

எல். முருகன்
எல். முருகன் பாஜக தலைவராக இருந்த போது, கடந்த இரண்டு - மூன்று மாதங்களில் முக்கியமான சில பணிகளை மேற்கொண்டு வந்தார். அந்த பணிகளை புதிய தலைவர் அண்ணாமலையும் தொடர்வாரா கேள்வி எழுந்துள்ளது. முதல் விஷயம் தேர்தல் நிதி செலவினம் தொடர்பான விசாரணை. தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் சிலர் தேர்தலின் போது நிதியை செலவிடுவதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

எச். ராஜா
முக்கியமாக காரைக்குடியில் எச். ராஜா 4 கோடி ரூபாய்க்கு வீடு கட்டுவதாகவும், அவர் தேர்தல் நிதியை முறைகேடு செய்துவிட்டதாகவும் நிர்வாகிகள் சிலர் புகார் அளித்து, கட்சியில் இருந்தே வெளியேறினார்கள். இந்த விவகாரத்தை எல். முருகன் மிகவும் சீரியஸாகவே அணுகினார். பேட்டி ஒன்றில் கூட.. எச். ராஜாவாக இருந்தாலும் சரி முறைகேடு புகார் குறித்து கண்டிப்பாக விசாரிப்பேன் என்று எல். முருகன் கூறினார்.

அண்ணாமலை
இந்த நிலையில் அவர் இந்த விசாரணையை முடித்து, முழுமையான முடிவுகளை எடுக்கும் முன்பே இணை அமைச்சராக்கிவிட்டார். இதனால் எல். முருகன் விட்டுச்சென்ற விசாரணையை தற்போது அண்ணாமலை தொடர்ந்து மேற்கொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக இருந்த போது அண்ணாமலை கண்டிப்பான அதிகாரியாக பெயர் எடுத்தவர்.அதேபோல் கட்சியிலும், விசாரணைகளை மேற்கொண்டு தன்னை ஸ்டிரிக்ட் தலைவராக காட்டிக்கொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

வாய்ப்பு
கட்சியின் சீனியர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அண்ணாமலைக்கு இது ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் தனது தலைவர் பதவிக்கு எதிராக இருக்கும் சிலரையும் அண்ணாமலை வழிக்கு கொண்டு வர முடியும். இதுபோக எல். முருகன் தலைவராக இருந்த குறுகிய காலத்திலேயே கொங்கு மாவட்டங்களில் பாஜகவை வலுப்படுத்தினார். கொங்கு மாவட்டங்களில் தேர்தலுக்கு பல நாட்களுக்கு முன்பில் இருந்தே சிறு சிறு கூட்டங்களை பாஜக நடத்தியது. அதிமுக உதவியுடன் அங்கு பாஜக வேகமாக வளர்ந்தது.

கொங்கு
யோகி வரை பலரை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தார். தற்போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த அண்ணாமலை, அங்கு பாஜகவை வலுப்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. வீடு வீடாக சென்று பாஜகவில் கொள்கைகளை பரப்புவேன் என்று அண்ணாமலை இன்றுதான் குறிப்பிட்டார். கொங்கு மாவட்டங்களில் இருந்து அண்ணாமலை இதற்கான பணிகளை தொடங்குவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

வேறு என்ன
இதெல்லாம் ஒருபுறம் இருக்க பாஜகவிற்குள் தலைவர்கள் தற்போது இரண்டாக பிரிந்து கிடக்கிறார்கள். முக்கியமாக முன்னாள் தலைவர் எல். முருகனுடன் எஸ். வி சேகர் போன்ற நிர்வாகிகள் மோதல் போக்கை கடைபிடித்தனர். பாஜக vs பாஜக என்ற நிலை கட்சிக்கு உள்ளேயே இருந்தது. இந்த நிலையில் புதிய தலைவர் அண்ணாமலை இது போன்ற மோதல்போக்குகளை விட்டுவிட்டு, அதிருப்தி உறுப்பினர்களுடன் சுமுகமான பணிகளை மேற்கொள்வாரா அல்லது எல். முருகன் ஸ்டைல் தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

நடிகர்கள்
எல். முருகன் தலைமையின் கீழ் தமிழ்நாடு பாஜகவில் பல நடிகர்களும், நடிகைகளும் கட்சியில் இணைந்தனர். அதேபோல் தற்போதும் அண்ணாமலை சினிமா பிரபலங்களை கட்சிக்குள் கொண்டு வருவாரா அல்லது எல். முருகன் பாணியை கடைபிடிக்காமல் கட்சியில் வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு தலைவராக அண்ணாமலை கட்சியில் எப்படி செயல்பட போகிறார்,என்ன செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications