"வீடியோ" வெளியாகுதாம்.. பரபரப்பை கிளப்பும் தலைவர்களின் பகீர் பேச்சு.. புது அஸ்திரம் கை கொடுக்குமா?
அதிமுக, அமமுக, திமுகவில் வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரிப்பது தவறான யுக்தியாகும்
சென்னை: தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், வீடியோ விவகாரங்கள் பற்றின தகவல்களும் காரசாரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வழக்கமாக, ஒரு கட்சியில் இருப்பவர்கள், இன்னொரு கட்சியை விமர்சிப்பது வழக்கம்.. அப்படி விமர்சிக்கும்போது, தான் சார்ந்து நிற்கும் கட்சிக்காக, விசுவாசத்திற்காக, உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடுவதும் வழக்கம்தான்.
ஆனால் நாளடைவில் இவர்கள் அதிருப்தி காரணமாகவோ, அல்லது வேறு பிரச்சனை காரணமாகவோ மாற்று கட்சியில் இணையும் சூழல் ஏற்படுகிறது..
பேச்சுக்கள்
அப்படிப்பட்ட நேரத்தில், ஏற்கனவே முந்தின கட்சி அல்லது கட்சி நபர்கள் பற்றி விமர்சித்த அத்தனை பேச்சுக்களும் இவர்களுக்கு எதிராகவே திரும்பி விடுகிறது. இது வீடியோவாகவும், ஆடியோவாகவும் வைரலாகின்றன. குறிப்பாக தேர்தல் சமயங்களில் இதை ஒரு ஆயுதமாகவே , கேடயமாகவே பயன்படுத்தும் மலிவு யுக்தியும் நடக்கிறது. அதுதான் தற்போதும் தலைதூக்கி உள்ளது.
தேர்தல் ஆணையம்
கடந்த சிலதினங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் ஒரு பேட்டி தந்தார்.. அமைச்சர் கடம்பூர் ராஜு குறித்த வீடியோ ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்... தினகரன் இப்படி சொன்னதுமே, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது... இதற்கு காரணம், ஏற்கனவே இவர் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது சுயேச்சையாக போட்டியிட்ட சமயம், அவரது ஆதரவாளரான வெற்றிவேல் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து கொண்டிருந்த வீடியோவை வெளியிட்டார்.
வெற்றிவேல்
அப்போதுதான் ஜெயலலிதா இறந்த சமயம் என்பதால், சர்ச்சைகள் வலுவாக பின்னி கிடந்ததால், சசிகலா தரப்பின் மேல் வைக்கப்பட்ட குற்றசாட்டை நொறுக்கும் விதத்தில் இருந்தது.. இந்த வீடியோவை தன்னுடைய தேர்தலில் ஒரு யுக்தியாக தினகரன் பயன்படுத்தி கொண்டதுடன், வெற்றியையும் பெற்று தந்தது என்று நம்பினார்..
தினகரன்
அதேபாணியைதான் இப்போதும் கடம்பூர் ராஜுவுக்கு எதிராக கையில் எடுத்துள்ளார். வீடியோவை தேர்தல் ஆணையத்திடம் தர போவதாக சொல்கிறார். உண்மையிலேயே கடம்பூர் ராஜு மீது அதிருப்தியோ, கோபமோ, ஆதங்கமோ இருந்தால், இவ்வளவு காலம் அந்த வீடியோ பற்றி தினகரன் வாய் திறந்திருக்கலாம்.. அதைவிட்டு விட்டு தேர்தல் நேரத்தில் வீடியோ என்று பேச்செடுப்பது கிட்டத்தட்ட மிரட்டல் பாணியாகவே கருதப்படுகிறது..
திமுக, அதிமுக
கதினகரன் மட்டுமல்ல, திமுக, அதிமுக என பாகுபாடின்றி ஆங்காங்கே இப்படித்தான் நடந்து வருகிறது. திமுகவின் செந்தில்பாலாஜியும், தங்கதமிழ்செல்வன், முன்னாள் எம்பி லட்சுமணன், இவர்கள் எல்லாம் அதிமுகவில் இருந்தபோது திமுகவை எப்படி எல்லாம் திட்டினார்கள் என்ற வீடியோக்களை தேடி பிடித்து சோஷியல் மீடியாவில் பரப்பி கொண்டிருக்கிறது ஒரு குரூப்..
செந்தில்பாலாஜி
"அம்மா.. நீங்கள் மட்டும் பிறக்கவில்லை என்றால், தமிழகம், கோபாலபுரத்து கொள்ளைக்காடாக மாறி இருக்கும்... உங்கள் மீது குற்றச்சாட்டை கூற, ஸ்டாலினுக்கு லட்சத்தில் ஒரு பங்கு கூட தகுதியில்லை என்று சட்டசபையில் அன்று செந்தில்பாலாஜி பேசினாராம்.. அந்த வீடியோவையும் அதிமுகவினர் ஷேர் செய்து வருகின்றனர்..
உருக்கம்
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் ஓபிஎஸ்சுக்கு எதிராக பேசின வீடியோ, சசிகலாவை புகழ்ந்த வீடியோ, இப்படி கையில் கிடைக்கும் வீடியோக்களை வைத்து, சம்பந்தப்பட்டவர்களை டேமேஜ் செய்யும் போக்கும் தொடங்கி உள்ளது.. இந்த வீடியோக்களை வைத்து, பொதுமக்களின் வாக்குகளை பெறும் முயற்சியும் நடந்து வருகிறது.
ஆபத்து
ஆனால், என்னதான் இப்படியெல்லாம் செய்தாலும் சரி, ஆபத்து காலங்களில் மக்களுடன் மக்களாக நின்று, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, உரிமைகளை மீட்டு தந்து, பக்கபலமாக நின்ற கட்சி எதுவோ, வேட்பாளர் எவரோ, அவரேதான் மக்கள் மனசில் மீண்டும் இடம்பிடிப்பார்.. காலங்காலமாக மக்களுக்கு செய்த நன்மைகளும், உரிய திட்டங்களும்தான் வாக்குகளை ஈட்டி தரும்.. மத்தபடி, இந்த வீடியோவை காட்டி ஓட்டு வாங்கும் மலிவு அரசியலுக்கு தமிழகம் என்றுமே பணியாது..!