ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை... மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணியை பதவி விலக கோரும் காங்கிரஸ்..!
சென்னை: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணியின் காரை மறித்து காங்கிரஸ் கட்சியினர் ஆவேச முழக்கங்கள் எழுப்பினர்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இனியும் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என ஸ்மிரிதி ராணியிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உ.பி.யில் ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு நேற்று முன் தினம் நிகழ்ந்த அவமரியாதையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கார் மறிப்பு
ஹத்ராஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு குற்றவாளிகளை காப்பாற்றி வருவதாக கூறி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணியை காங்கிரஸ் கட்சியினர் மறித்தனர். நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

காங்.வலியுறுத்தல்
இதனிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிரிதி ராணியை, உடனடியாக அந்தப்பதவியில் இருந்து விலக வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. கார் கண்ணாடியை இறக்கிவிட்டு போராட்டக்காரர்களை அழைத்துப் பேசிய ஸ்மிரிதி ராணி ஹத்ராஸ் வழக்கில் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குண்டுகட்டாக
ஆனால் அதனை செவிமடுக்காத இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்மிரிதி ராணி காருக்கு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அவர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்ற காவல்துறையினர், மத்திய அமைச்சர் வாகனத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். அப்போது மிகவும் ஆவேசப்பட்டவர்களாக குரல் எழுப்பிய அவர்கள், பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என உரத்த குரல் எழுப்பினர்.

பரபரப்பு
இதனால் வாரனாசியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரியும், ஸ்மிரிதி ராணியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகக்கோரியும் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் உ.பி.யில் பதற்றமான நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications