தலையில் துண்டு.. கையில் டார்ச்.. சென்னையில் கொட்டும் மழையிலும் கைவரிசை! காட்டிக்கொடுத்த சிசிடிவி
சென்னை: சென்னையில் கொட்டும் மழையிலும் தலையில் துண்டு போட்டுக்கொண்டு திருடிய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் திருவொற்றியூர் பகுதியில் வசிப்பவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.

மழையிலும் திருட்டு
சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தொடங்கும் இந்த மழை அதிகாலை வரையிலும் நீடிக்கிறது. இந்நிலையில், இந்த மழையிலும் திருவொற்றியூர் பகுதியில் சில வீடுகளில் பொருட்கள் தொடர்ந்து திருடுபோகும் சம்பவம் அரங்கேறி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனாலும் இந்த திருட்டு சம்பவங்கள் குறைந்தபாடில்லை. திருவொற்றியூரில் பல இடங்களிலும் இந்த திருட்டு சம்பவம் மீண்டும் மீண்டும் அரங்கேறி வந்தன.

சிசிடிவி
இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் ஒருவர் கொடுத்துள்ள புகாரில் பேரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். புகாரில், "நள்ளிரவில் நான் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் கேட்டு விழித்து பார்க்கையில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் வீட்டில் திருட முயற்சி செய்தது தெரிய வந்தது. உடனே லைட்டை போட்டு யார் என சத்தம் போட்டதில் அவர்கள் அங்கிருந்து உடனடியாக எஸ்கேப் ஆகிவிட்டனர்" என்று வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இதனையடுத்து திருட்டு முயற்சி நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

முயற்சி
அதில் இரண்டு இளைஞர்கள் தலையில் துண்டு போட்டுக்கொண்டு வீடுகளுக்குள் திருட முயல்வது தெரிய வந்தது. திருட வந்த இருவரில் ஒருவர் மட்டும் வீட்டிற்குள் சென்று திருட முயன்றுள்ளார். மற்றொருவர் காவலுக்காக யாராவது வருகிறார்களா? என்று நோட்டம் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறார். பின்னர் உள்ளே சென்றவர் வெளியில் வந்ததும் இருவரும் அங்கிருந்து நொடிப்பொழுதில் சென்றுவிடுகிறார்கள். வீட்டிற்குள்ளே சென்று வந்தவரின் கையில் பொருள் ஏதோ இருந்திருக்கிறது.

கைது
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தண்டையார்பேட்டையை சேர்ந்த சஞ்சய் மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், வேறு எந்தெந்த பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பது குறித்தும் விசாரித்தனர். அப்போது திருவொற்றியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அநேக இடங்களில் இவர்கள் கை வரிசையை காட்டியுள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications