ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து ஜாகிர் உசேன் வெளியேற்றம்...விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர் சேகர் பாபு
ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
சென்னை: இஸ்லாமியர் என்பதற்காக நடன கலைஞர் ஜாகிர் உசேன் அவமானப்படுத்தப்பட்டிருந்தால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
''நான் என் தாய்வீடாக கருதும் , தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன். 'காரணம் என் பெயர்'

முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு, பல அவமானங்களுக்கிடையே துரத்தப் பட்டேன்.
இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது.
என்னை துரத்தியவன் ஒரு நடத்தை கெட்டவன் மட்டுமல்ல. இந்நாட்டின் இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரானவன்.
காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை'' என்று கூறியுள்ளார்.
நான் 8 வயது முதலே திருச்சி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்றுள்ளேன். பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் முதன் முறையாக மதத்தின் அடிப்படையில் என்னை தடுத்து நிறுத்தியது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஜாகிர் உசேன் கூறியுள்ளார்.
ரங்க ராஜன் என்பவர்தான் திட்டமிட்டு இதனை செய்துள்ளார். மற்ற நிர்வாகிகள் யாரும் என்னை தடுக்கவில்லை. மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். இதை சீர்குலைப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட மன உளைச்சல் காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்ட ஜாகிர் உசேன், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து ஜாகீர் உசேனை வெளியேற்றவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்டதற்கு கோயில் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் யாரும் ஜாகிர் உசேனை தடுக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இஸ்லாமியர் என்பதற்காக நடன கலைஞர் ஜாகிர் உசேன் அவமானப்படுத்தப்பட்டிருந்தால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications