துபாய்க்கு ஷார்துல்.. மாலத்தீவுக்கு மாகர், ஜலஸ்வா.. விரைந்த போர்க்கப்பல்கள்.. மீட்பில் கில்லாடிகள்!
கொச்சி: வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்பதற்காக துபாய் சென்றுள்ள ஐ.என்.எஸ் ஷார்துல் மாலத்தீவு சென்றுள்ள ஐ.என்.எஸ் மாகர் மற்றும் ஐ.என். எஸ் ஜலஸ்வா போர்க்கப்பல்களின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம்.
Recommended Video
இந்திய கடற்படையைச் சேர்ந்த 3 கப்பல்கள் கப்பல்கள் துபாய் மற்றும் மாலத்தீவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்காக கொச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளன.
துபாய்க்கு ஐ.என்.எஸ் ஷார்துல் கடற்படை கப்பல் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதேபோல் மாலத்தீவுக்கு ஐ.என்.எஸ் மாகர் மற்றும் ஐ.என்.எஸ் ஜலாஷ்வா ஆகிய போர் கப்பல்கள் புறப்பட்டு சென்றன.

நீர் யானை ஜலாஷ்வா
இந்த மூன்று கப்பல்களில் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம். ஐஎன்எஸ் ஜலாஷ்வா கப்பலை பற்றி முதலில் பார்ப்போம். ஜலாஷ்வா என்பதற்கு இந்தியில் நீர் யானை என்று பெயர். அமெரிக்காவில் இருந்து 90 மில்லியன் டாலர் கொடுத்து ஆறு கடற்படை ஹெலிகாப்டர்களுடன் சேர்த்து 2005 ம் ஆண்டு வாங்கப்பட்ட கப்பல் ஐஎன்எஸ் ஜலாஷ்வா ஆகும். இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்படை பிரிவில் இந்த கப்பல் 2007 ஜூன் முதல் பயன்பாட்டில் உள்ளது. கிழக்கு மண்டல கடற்படை பிரிவில் பணியாற்றி வருகிறது.

எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள்
இந்த கப்பல் 7696 டன் எடை உள்ளது. 8894 டன் எடையை ஏற்றலாம். ஒட்டுமொத்தமாக அதிக பட்சம் 16590 டன் வரை எடையை இக்கப்பல் தாங்கும். ஐஎன்எஸ் ஜலஸ்வா 20 நாட் வேகத்தில் (37 கிலோமீட்டர் வேகத்தில்) செல்லக்கூடியது. அமெரிக்கா பயன்படுத்தும் இதே பிரிவில் கப்பலில் 24 அதிகாரிகள் மற்றும் 396 மாலுமிகள் உள்பட 900 கடற்படையினர் பணியாற்றுகிறார்கள். ஆனால் இந்திய கடற்படையில் பணியாற்றும் ஜலஸ்வா கப்பலில் 27 அதிகாரிகள் மற்றும் 380 கடற்படையினர் பணியாற்றுகிறார்கள்.

வீரர்களுக்கு பயிற்சி களம்
ஐ.என்.எஸ். மாகர் என்பது இந்திய கடற்படையின் மாகர்-வகுப்பு போர் கப்பல் ஆகும். கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது. 1987ம் ஆணடு முதல் கடற்படை சேவைக்கு அர்பணிக்கப்பட்டது. இந்த கப்பல் இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை (ஐ.பி.கே.எஃப்) ஆபரேஷனில் பங்கேற்றது.விசாகப்பட்டினம் அருகே 2006ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி ஐ.என்.எஸ் மாகர் கப்பலில் தற்செயலான தீ விபத்து ஏற்பட்டது. கப்பல் காலாவதியான வெடிமருந்துகளால் விபத்து ஏற்பட்டது. இதில் 3 மாலுமிகள் உயிரிழந்தனர். ஆறு மாலுமிகள் காயமடைந்தனர். 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து கொச்சி, ஐஎன்எஸ் பயிற்சி மையத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது ஐஎன்எஸ் மாகர் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி களமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நிவாரணம் வழங்கியது
ஐ.என்.எஸ் ஷார்துல் போர் கப்பல் இந்திய கடற்படையில் உள்ள போர் கப்பல்களில் முன்னணி கப்பல் ஆகும். 2006 ஆம் ஆண்டு கடலில் சோதனையாக பயன்படுத்தப்பட்ட இக்கப்பல் கார்வாரில் உள்ள ஐ.என்.எஸ் கடம்பா என்ற கடற்படை தளத்தில் பயன்படுத்தப்பபட்டது. அதன்பின்னர் அக்டோபர் 3, 2008 அன்று, மும்பை கடற்படைத் தளத்தில் நடைபெற்ற விழாவில், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. கடற்படை வீரர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த கப்பல் கொச்சியில் உள்ள தெற்கு கடற்படையில் இயங்கியது. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் இக்கப்பல் தென்னிந்திய பெருங்கடலில் இரண்டு மாத காலம் இந்த பிராந்தியத்தில் கண்காணிப்பை மேற்கொள்ள அனுப்பப்பட்டது. 2020ம் ஆண்டு மார்ச மாதம் 10ம்தேதி அன்று, ஐ.என்.எஸ் ஷார்துல் புயல் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மடகாஸ்கர் நாட்டிற்கு நிவாரணப் பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது. போர்ட் அன்ட்சிரானானா நகருக்கு 600 டன் அரிசியை சுமந்து சென்று இந்தியா சார்பில் ஒப்படைத்தது. எந்தவொரு இந்திய போர்க்கப்பல்களும் மேற்கொள்ளாத மிகப்பெரிய நிவாரண சேவையை ஐ.என்.எஸ் ஷார்துல் செய்துள்ளது.

மூன்று கப்பல்களும்
இதற்கிடையே துபாய் சென்றுள்ள ஐ.என்.எஸ் ஷார்துல் மாலத்தீவு சென்றுள்ள ஐ.என்.எஸ் மாகர் மற்றும் ஐ.என். எஸ் ஜலஸ்வா ஆகிய மூன்று போர்க்கப்பல்களும் கொச்சிக்கே வந்தடைய உள்ளன. கொச்சியில் இருந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட உள்னர்.












Click it and Unblock the Notifications