பென்டிரைவில் இருந்த 100+ அதிர்ச்சி வீடியோக்கள்.. ஷாக் ஆன போலீஸ்! விசாரணையில் வெளிவந்த பரபர தகவல்கள்!
கோவை : கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்ட ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த பென் டிரைவில் 100க்கும் மேற்பட்ட அதிர்ச்சிகரமான வீடியோக்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை உக்கடம் அருகே நடைபெற்ற சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில், பயங்கரவாத தொடர்புகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு கிடைத்த ஆதாரங்கள் பற்றி வெளியாகி இருக்கும் பல்வேறு தகவல்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு பென் டிரைவில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாத இயக்கங்கள் சார்ந்த வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம்
கோவை உக்கடம் அருகே கோட்டைமேட்டில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி காரில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபின் ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

பென் டிரைவ்
மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரின் வீடுகள், மற்றும் சந்தேக நபர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அவர்களின் வீடுகளில் இருந்து செல்போன், லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றினர். குனியமுத்தூரில் ஏற்கனவே என்.ஐ.ஏவால் விசாரிக்கப்பட்ட ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பென் டிரைவை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இருந்த வீடியோக்களைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொலை செய்யும் காட்சி
அந்த பென் டிரைவில், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்துள்ளன. ஐ.எஸ் பிரசார வீடியோக்கள், தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாத தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்துள்ளன.

தடை செய்யப்பட்ட இயக்க வீடியோக்கள்
மேலும், இலங்கை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளியான ஷக்ரான் ஹசீம் பேசிய வீடியோக்கள், 2019-ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த தேவலாய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விளக்கங்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள மத போதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுகள் போன்ற வீடியோக்களும் அதிகளவில் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருந்தி வாழ்கிறேன்
இது தொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கடந்த 2015-ஆம் ஆண்டு, தான் ஐ.எஸ் இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அதில் இருந்து விடுபட்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். எனினும் அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடர் விசாரணை
இதற்கிடையே, கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களை காவலில் எடுக்கவும் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் காரணமாக கோவை போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நுண்ணறிவு பிரிவு
மேலும், மத்திய, மாநில உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், கோவையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு எண்ணத்தில் 53 இளைஞர்கள் இருப்பதை மாநகர காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவர்களது பட்டியலை சேகரித்து நுண்ணறிவு பிரிவு, சிறப்பு நுண்ணறிவுப் பிரிவினர் உள்ளிட்ட உளவுத்துறையினர் மூலம் அவர்களின் செயல்பாடுகளை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மனமாற்ற திட்டம்
ஐ.எஸ் ஆதரவு எண்ணத்தில் உள்ள இளைஞர்களுக்கு உலமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் நல்வழிப் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான திட்டத்தில் அந்த இளைஞர்களை பங்குபெற வைத்து, நல்வழிக் கருத்துகளை கூறி, ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications