கிலோ கணக்கில் நகையை அள்ளிய களவாணிகள்.. கடைசியில் காத்திருந்த ஷாக்.. கோவை சம்பவம்
கோவை: கோவை அருகே நகைக்கடையில் தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை கொள்ளையடித்து ஏமாந்த 2 திருடர்கள் போலீசாரிடம் சிக்கி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
கோவை தடாகம் ரோடு வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் அல்ஷிபா. இவர் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ரூ.3லட்சம் மதிப்பிலான ஒரு கிராம் தங்க நகைகளான கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
அதே நாளில் கேவை இடையர்பாளையத்திலும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கோவை துடியலூர் இடையர்பாளைத்தை சேர்ந்தவர் கோபால்ராஜூ. கொங்கன் ரயில்வேயில் தலைமை பொறியாளராக உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பணியிடம் என்பதால் கடந்த மே மாதம் குடும்பத்துடன் அங்கு தங்கி வேலை செய்து வருகிறார்.
மோடிகள் அனைவருமே திருடர்கள்.. பிரசாரத்தின்போது சரச்சை பேச்சு.. நீதிமன்றத்தில் ராகுல் காந்தி விளக்கம்
நகை கொள்ளை
இந்நிலையில் கடந்த 8ம் தேதி அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து கோபால்ராஜூ வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 59 சவரன் தங்க நகை மற்றும் 4.5 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் அளித்தார். இந்த இரு திருட்டு சம்பவங்கள் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்படை அமைப்பு
இதையடுத்து கோவை எஸ்.பி. செல்வநாகரத்தினத்தின் உத்தரவின் பேரில் டிஎஸ்பிக்கள் ராஜபாண்டியன், ஜாபர், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், எஸ்ஐக்கள் பாண்டியம்மாள், ஜெகநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையர்கள் யார் என்பது தெரியவந்தது.
நகைகள் மீட்பு
இதையடுத்து அத்திப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ், கண்ணப்பநகரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் கடை மற்றும் வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். அதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 76 பவுன் நகைகள் மற்றும் 4.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கவரிங் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
வாக்குமூலம்
திருடர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், வேலாண்டி பாளையத்திலுள்ள கடைக்குள் செல்லும் போது, அங்குள்ள வளையல் , நெக்லஸ் உள்ளிட்ட நகைகள் பளபளவென மின்னியது. அத்தனையும் தங்கம் என நினைத்து சந்தோஷத்துடன் அள்ளி சென்று ஏமாந்துவிட்டோம் என்று கூறினார்கள். கைதான இருவரில் கண்ணன் மீது 5 காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.