அலர்ட்! பொங்கிப் பெருகிய பவானியாறு! ஆர்பரித்துச் செல்லும் வெள்ளம்! மக்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, 4 மதகுகளின் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் காரமடை வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர், கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக திகழ்கிறது. பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாகும்.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பில்லூர் அணை
இதனால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாகவும் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 97 அடியாக உள்ள நிலையில், மழை காரணமாக அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பவானியாற்றில் வெள்ளம்
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, 4 மதகுகளின் வழியாக, அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த ஆண்டில் 2-வது முறையாக பில்லுர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி, அணையில் இருந்து உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால், பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை
ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்வதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
மேலும், பவானியாற்றின் கரையோர பகுதிகளான தேகைம்பட்டி, நெல்லித்துறை, சிறுமுகை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசித்து வரும் மக்கள், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications