கோவையில் வீட்டிலேயே பிரசவம்.. உயிரிழந்த குழந்தை.. தாய் மீது வழக்குப்பதிவு
கோவை : கோவையில் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்ததால் பிறந்த ஆண் குழந்தை இறந்தது. இதுதொடர்பாக குழந்தையின் தாயான புண்ணியவதி என்ற பெண்ணின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உப்புக்கார வீதி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். நகைப் பட்டறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் புண்ணியவதி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், புண்ணியவதி மீண்டும் கர்ப்பமடைந்தார்.
4வது குழந்தை என்பதால் மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவர்கள் திட்டுவதோடு குடும்ப கட்டுப்பாடு செய்யவும் அறிவுறுத்துவார்கள் என்பதால் மனவருத்தத்துடன் இருந்து வந்துள்ளார் புண்ணியவதி. இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டுள்ளது.

தனக்குத் தானே பிரசவம்
இதையடுத்து பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் வைத்து கணவர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார் புண்ணியவதி. தனக்குத் தானே பார்த்த பிரசவத்திற்கு பின் புண்ணியவதிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு அதன் தொப்புள்கொடியை சரியாக அறுபடாததாலும், முறையாக பிரசவம் பார்க்காததாலும் குழந்தையும், தாயும் மயங்கினர்.

உயிரிழந்த குழந்தை
இதனால் அதிர்ச்சியடைந்த விஜயகுமார் மற்றும் அருகிலிருந்தோர் புண்ணியவதியையும் குழந்தையையும் மீட்டு, வீட்டின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரது உடல்நிலையும் மிக மோசமாக இருந்த நிலையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தாய் மீது வழக்கு
சரியாக பிரசவம் பார்க்காததே, குழந்தை மரணத்துக்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக்கத் தகவல்கள் வெளியாகியுள்ளது. முறையாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்தது குறித்து தகவல் அறிந்த பெரிய கடை காவல் துறையினர் குழந்தையின் மரணம் குறித்து தாய், தந்தை மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் குழந்தையின் தாய் புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315ன் படி அதாவது குழந்தை செத்துப்பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் சாக வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை உயிரிழப்பால் சோகம்
அறிவியல் வளர்ச்சி விண்ணை எட்டி வரும் நிலையில் கிராமப்புறங்களில் தான் வீட்டில் பிரசவம் பார்க்கும் நிகழ்வுகளும், தாய் மற்றும் சேய் மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் மருத்துவமனையில் தான் பிரசவம் பார்க்க வேண்டுமென அரசும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் வலியுறுத்தி நிலையில், வீட்டில் பிரசவம் பார்த்ததன் காரணமாக குழந்தை உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பிறப்பு குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications