பரம்பிக்குளம் அணை உடைந்தது வேதனையாக உள்ளது.. போர்க்கால நடவடிக்கை உறுதி: துரைமுருகன்
கோவை: பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து பாசன நீர் வீணாகுவது வேதனை அளிப்பதாகவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பு தன்மை குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய அணையாக பரம்பிக்குளம் அணை உள்ளது. 72 அடி உயரம் கொண்ட இந்த அணை, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இந்த அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள நான்கரை லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் அடைகின்றன. மேலும், ஆழியார் புதிய ஆயகட்டு பாசன நிலங்கள் மற்றும் கேரள மாநில எல்லையோர மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.
85 வயதிலும் ஸ்பாட்டில் வந்து நின்ற துரைமுருகன்! கருணாநிதியின் சிஷ்யன் என வியந்து நின்ற அதிகாரிகள்!
மதகில் உடைப்பு
இந்நிலையில், மதகுகளின் நடுவே இணைக்கப்பட்டிருந்த சங்கிலி அறுந்ததால், 3 மதகுகள் கொண்ட இந்த அணையின் ஒரு மதகில் திடீரென உடை ஏற்பட்டது. இதன் காரணமாக, அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம், அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
துரைமுருகன் ஆய்வு
இதனிடையே, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பரப்பிக்குளம் அணையை நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் அணையின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசியவதாவது: பரம்பிக்குளம் அணையில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. மதகுகளை ஏற்றி இறக்க உதவும் கை சங்கிலி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்ததால் மதகு சேதமடைந்து விட்டது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் நீர்வழிப் பாதையில் எந்தவித பாதிப்பும் இல்லை.
மதகுகள் பழுது பார்க்கப்படும்
அணையில் இருந்து நீர் கட்டுக்கடங்காமல் சுமார் 20,000 கன அடி நீர் வீணாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விபரீத சம்பவம் இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. அதிக எடையுள்ள இரும்பு சங்கிலி விழுந்ததால், மதகுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறி வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் மதகுகளும் பழுது பார்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
போர்க்கால நடவடிக்கை
தண்ணீர் முழுவதுமாக வடிந்த உடன், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதிகாரிகளுடன் கலந்து பேசி அணையை பராமரிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். இந்த ஆண்டு பாசனத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.