எடப்பாடியின் “ஐடியா”.. கோவையில் பட்டிமன்றம் நடத்தும் அதிமுக - தலைப்பு தெரியுமா? அங்கதான் "டுவிஸ்ட்”
கோவை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா சார்பில் அக்டோபர் 9 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நடுவராக இருக்கும் பட்டிமன்றம் நடைபெற இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது.
ஆனால், 2 வாரம் முன் எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.

அதிமுக நிகழ்வுகள்
இதன் தொடர்ச்சியாக அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்தடுத்து நடத்தி வருகிறது. கடந்த 29 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்று முதல்முறையாக தென் மாவட்டங்களுக்கு சென்றார்.

சிறப்பு பட்டிமன்றம்
அங்கு மதுரை மற்றும் விருநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா சார்பில் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோவையில் சிறப்பு பட்டிமன்றம் நடத்த அதிமுக முடிவு செய்து இருக்கிறது.

நடுவர் வைகைச்செல்வன்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.பி. அம்மன் அர்ஜுனன் கலந்துகொள்ள உள்ளார். "அரைநூற்றாண்டு கடந்து வீறுநடைபோடும் கழகம் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்க காரணம்" என்ற தலைப்பின் நடைபெறும் பட்டிமன்றத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நடுவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விவாதம்
அதிமுகவை சேர்ந்த நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் கல்யாணாசுந்தரம், அதிமுக செய்தித்தொடர்பாளர் மகேஸ்வரி, கோவை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் "கழகம் வென்று வந்த சோதனைகளே" என்ற தலைப்பிலும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், அதிமுக ஐடி பிரிவை சேர்ந்த கோவை சத்யன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சிங்கை அம்புஜம் ஆகியோர் "கழகம் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளே..." என்ற தலைப்பிலும் பேச உள்ளார்கள்.

வேலுமணி அறிவிப்பு
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆலோசனைப்படி, பட்டிமன்றம் நடைபெறுகிறது.

நமது அம்மா
புரட்சித் தலைவி "நமது அம்மா" தமிழ் நாளிதழ் நடத்தும் இந்த பட்டிமன்றம் "அரைநூற்றாண்டு கடந்து வீறுநடைபோடும் கழகம் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்க காரணம், கழகம் வென்று வந்த சோதனைகளே... கழகம் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளே..." என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் கோவை மாவட்டம் மருதமலையில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள, கழக உடன்பிறப்புகளையும் பொதுமக்களையும் அன்புடன் அழைக்கிறேன். அனைவரும் வாரீர்!!!" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications