அட்சய திருதியை: காலையில் கடையை திறந்த.. கோவை நகைக் கடைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கோவை: தங்க நகை வியாபாரிகளுக்கு அட்சைய திருதியை தினம் தான் தீபாவளி. மற்ற நாட்களை விட, அந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் மக்கள் அதிகளவு தங்கம் வாங்குவார்கள். அந்த வகையில் அட்சய திருதியை நாளான இன்று தங்க நகை உற்பத்திக்கு பெயர் பெற்ற கோவையில், காலை முதல் மக்கள் கூட்டம் குறைவாக இருப்பது நகைக்கடை உரிமையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அட்சய திருதியை
நாடு முழுவதும் இன்று அட்சய திருதியை தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை தான் அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் தங்கம், வெள்ளியில் ஆபரணங்கள் வாங்கினால் வாழ்க்கையில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் மக்கள் அன்றைய தினம் அதிகளவு ஆபரணம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.

தங்கம் விற்பனை
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தங்கநகை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து தங்க நகை வாங்குவார்கள். அட்சய திருதியை முன்னிட்டு கோவையில் தங்க நகைக் கடை உரிமையாளர்கள் இன்று அதிகாலை 5 மணி முதல் கடைகளை திறந்து வைத்து வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தனர்.
முன்பதிவு
தங்க நகை விற்பனைக்காக பெரும்பாலான நகைக் கடைகள் சலுகைகளை அறிவித்திருந்தன. சிலர் முன் பதிவும் அறிவித்தனர். ஆனால் முன்பதிவிலேயே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் வரவில்லை. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இந்த முறை முன்பதிவு குறைவாக இருந்ததாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். விற்பனையும் அதையே பிரதிபலக்கிறது.
கூட்டம் குறைவு
அதிகாலையே சென்று வாங்குவது சென்டிமென்ட் என்பதாலும்.. கூட்டம் குறைவாக இருக்கும்.. அதனால் நமக்கு வேண்டிய நகைகளை பொறுமையாக தேர்வு செய்யலாம் என்ற அடிப்படையில் சில வாடிக்கையாளர்கள் காலையே சென்றனர். தங்க நகை விலை அதிகமாக இருந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் விலை காரணமாக குறைந்த நகையை மட்டும் வாங்கி சென்றனர்.
சலுகை
காலையிலேயே விற்பனை மந்தமாக தொடங்கியதால் நகைக்கடை உரிமையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், "தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது. அதன் காரணமாக கடந்த வருட விற்பனை போல இந்த முறை இருப்பது சந்தேகம். வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சில சலுகைகளையும் அறிவித்தோம்.
வாடிக்கையாளர்கள்
அதிக விலையால் அது வாடிக்கையாளர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வாடிக்கையாளர்கள் நினைத்தபடியும் வாங்க முடியவில்லை. சராசரியாக 10 சவரன் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களால், 5 சவரன் மட்டுமே வாங்க முடிகிறது. இன்று வேலை நாள் என்பதாலும் காலை கூட்டம் குறைவாக உள்ளது. எனவே மாலை நேரத்தில் வியாபாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
வெள்ளி
போக போக.. வெள்ளியின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்வதும் நல்ல லாபத்தைக் கொடுக்கும்." என்று கூறினர். விலை அதிகம் என்பதால் மக்கள் ஆங்காங்கே ஏமாற்றமடைந்து, சம்பிரதாயத்துக்காக மிக குறைந்த நகையை வாங்கி செல்லும் காட்சியை பார்க்க முடிகிறது.
காலி
கோவை தங்க நகை உற்பத்திக்கு பெயர் பெற்றது. அதனால் அட்சய திருதி நாட்களின்போது, தங்க நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். டிஸைன்களும் அதிகமாக இருக்கும். ஆனால், தங்கத்தின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளதால் பெருவாரியான நகைக் கடைகள் காலியாகவே காட்சி அளிக்கின்றன.
குண்டுமணி
அதேபோல் அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்கினால், அடுத்தடுத்து செல்வம் சேரும் என்ற அடிப்படையில் சில மக்கள் குண்டு மணி அளவிலாவது தங்கம் வாங்க வேண்டும் என்று நகைக்கடைகளுக்கு செல்கின்றனர். தங்கம் விலை உயர்வால் சில மக்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாகவே தங்கத்தை முன்பதிவு செய்து தற்போது வாங்கியுள்ளதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications