என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
கோவை: கோவையில் வெற்றி பெறுவேன் என அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை என கிண்டல் செய்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கனிமொழி.
அப்போது பேசிய அவர், “தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம், இங்கு நின்றால் வானதி சீனிவாசன் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்து கோவையில் நிற்கிறார் அண்ணாமலை. ஆனால், பாஜக எங்கு நின்றாலும் 3-வது இடம்தான்.
கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் திமுக அரசு மக்களுக்கு செய்திருக்கும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேர்ந்திருக்கிறது. பாஜக மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
ஆயுஷ்மான் திட்டத்தில் மத்திய அரசு ஒரே செல்போன் எண்ணில் 10 லட்சம் பயனாளிகளை இணைத்திருக்கிறது. ஆனால் மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டம் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. இதேபோல் காலை உணவு திட்டம் மக்களுக்கு பெரிய அளவில் சென்று இருக்கிறது.” என்றார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, “போதைப் பொருட்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் சிக்கியது. குறிப்பாக குஜராத் துறைமுகத்தில் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது. அந்த துறைமுகத்தை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். போதைப்பொருள் தடுப்புத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு உதவ மாநில அரசு தயாராக இருக்கிறது.” என்றார்.
ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை? தீயாகப் பரவி வரும் வீடியோ.. விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!
மேலும், கோவையில் பாஜக 60 சதவிகித வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி “60% வாங்கலாம், 90% வாங்கலாம், 100 சதவீதம் கூட வாங்கலாம் என கனவு காண்பது அவரது உரிமை. ஆனால் வெற்றி நிச்சயமாக திமுகவுக்குத்தான்.” என்றார்.
ஆளுங்கட்சி நிறைய பணத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், நான் ஒரு பைசா கூட செலவழிக்கமாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, “ஒரு பைசா கூட ஓட்டுக்கு செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார். பின்னர் எதற்காக அவ்வளவு கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கினார்கள்? நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. முதலமைச்சர் திட்டங்களை நம்பித்தான் இங்கே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவார்கள்.” என்றார்.












Click it and Unblock the Notifications