வானதிக்கு எதிராக செக்.. கோவை தெற்கில் நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் ஒன்று திரண்டு மறியல்
கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணம் விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களோடு சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.
அவரோடு அதே தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வகாப்பும் போராட்டத்தில் பங்கேற்றார். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வகாப் போட்டியிடுகிறார்- இங்கு கடும் போட்டி நிலவுகிறது.
வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள்
இந்நிலையில வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு இன்று டோக்கன் தந்ததாக கூறப்படுகிறது. அப்படி டோக்கன் தந்த சிலரை பிடித்து போலீசார் காங்கிரஸ் கட்சியினர் ஒப்படைத்தனராம்.
காங்கிரஸ் மறியல்
ஆனால் அவர்கள் மீது தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை கூறி கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வகாப்பும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்;டது. புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கோவை
இதற்கிடையே கமல்ஹாசன், யாராவது வாக்குக்கு பணம் தந்தாலோ அல்லது டோக்கன் தந்தாலோ அவர்கள் தன்னை டேக் செய்யும் படிகூறியிருந்தார். அப்படி டேக் செய்பவர்கள் தானே நேரில் வருவேன் என்று கூறியிருந்தார். இப்படி நூதன முறையில் அறிவிப்பு வெளியிட்டிருந்த கமல், இன்று காலை சென்னையில் வாக்குபதிவு செய்த நிலையில், கோவை செல்கிறார். அங்கு தனது தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிடுகிறார்.
Recommended Video
சந்தேகம் இல்லை
முன்னதாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு வாக்களித்த வந்தார். வரிசையில் நின்று வானதி சீனிவாசன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று உற்சாக தெரிவித்தார்.