6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கோரிக்கை.. கருணாநிதியின் கனவைத் தொடரும் ஸ்டாலின்!
கோவை : மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் என்பதே முதலமைச்சரின் இலக்கு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என்பதை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தற்போதைய திமுக அரசும் பின்பற்றுகிறது.
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி
2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் அறிக்கையின்போதே மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்திருந்தது திமுக. 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில், மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை அரசின் கொள்கை முடிவாக அறிவித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அதைத் தொடர்ந்து, தருமபுரி, விழுப்புரம், திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்நிலையில், மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு இருப்பதால், தற்போது மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் விரைவில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா மற்றும் தமிழ்மன்றம் திறப்பு விழா நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.
ராகிங் மனநிலை
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்வது வழக்கமான ஒன்றாக இருந்த நிலையில் தற்போநு இந்த மனநிலை மாணவர்களிடம் மாறி இருக்கிறது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் முதலாண்டு மாணவர்களுக்கான வெள்ளை அங்கியை, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் கொண்டு வந்து கொடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
11 கல்லூரிகளில்
தொடர்ந்து பேசிய மா.சுப்பிரமணியன் கடந்த ஆண்டு வரை இந்தக் கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை 150 இருந்தது. இந்த ஆண்டு ஐம்பது கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்திருக்கிறது. 11 மருத்துவக் கல்லூரிகளில் 150 மாணவர்களை சேர்க்க இந்த ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் தந்திருக்கிறது. மேலும் ஆண்டுதோறும் 10,825 மாணவர்கள் தமிழகத்தில் சேர்க்கை நடக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் கூட இந்த அளவில் மாணவர் சேர்க்கை இல்லை எனத் தெரிவித்தார்.
6 மாவட்டங்களில்
மேலும் பேசிய அவர், "தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் என்பதே முதலமைச்சரின் இலக்கு" எனத் தெரிவித்துள்ளார்.