கோவையில் மத கலவரத்தை உருவாக்க சதி- அண்ணாமலையிடம் விசாரிக்க கோரி கோவை போலீசில் திவிக மனு
கோவை: கோவையில் மத கலவரத்தை உருவாக்கும் சதித் திட்டத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஷம பிரசாரம் செய்து வருவதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
கோவையில் கார் சிலிண்டர் வெடித்ததில் முபின் என்பவர் உயிரிழந்தார். முபின் பயன்படுத்திய வாட்சப் ஸ்டேட்டஸ் உள்ளிட்டவைகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்கப்படுத்தினார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த தகவல்களை அண்ணாமலை பகிரங்கப்படுத்தியது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து முபின் கூட்டாளிகள் 6 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சம்பவத்தில் ஊபா எனும் சட்டவிரோத பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு ஏஜென்சி) விசாரணைக்கு மாற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகமும் என்.ஐ.ஏ. விசாரிக்க உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ.விசாரித்து வருகிறது.

இந்நிலையில் கோவை போலீசில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். கோவை திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளான சூலூர் பன்னீர்செல்வம், வழக்கறிஞர் சரவணன்,தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன்,மாதவன், இயல், வழக்கறிஞர் விஷ்ணு ஆகியோர் போலீசில் அளித்த மனுவில் கோவையை கலவர பூமியாக மாற்ற பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மேலும், கோவையில் கடந்த 23.10.2022 அன்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து நடந்தது. கோவை மாநகர காவல் துறை இந்த விசயத்தில் தொடர்ந்து விசாரித்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் விசாரணையை கெடுக்கும் விதமாகவும் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாகவும் தொடர்ந்து மதக் கலவரத்தை உருவாக்கும் வகையில் முன்னுக்கு பின் முரணாக பேசி விஷமப் பிரச்சாரம் செய்து பொது அமைதியை கெடுத்து கோவையை கலவர பூமியாக்க பாஜக தலைவர் அண்ணாமலை முயற்சிக்கிறார். ஆகையால் அண்ணாமலையை விசாரணைக்கு_உட்படுத்த வேண்டும். இந்த விசாரணையில் அண்ணாமலை மீது குற்றம் இருக்கும் பட்சத்தில் அதற்கு உரிய_நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications