கோஷ்டி மோதலில் இந்து முன்னணி பிரமுகர் கார் மீது கல்வீச்சு- இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேர் கைது
கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி பிரமுகர் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் வீடுகள், வாகனங்கள் மீது திடீர் திடீர் என பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் பெருமளவு சேதம் ஏற்படவில்லை.
5 நாட்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற இடங்களில் போலீசார் சிசிடிவி கேமராக்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைகளின் போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இருந்தபோதும் கடந்த காலங்களில் பாஜகவினர் இத்தகைய பெட்ரோல் குண்டு வீச்சு நாடகங்களை நடத்தியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து சந்தேகங்களும் எழுப்பினர். ஆனால் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டதால், திருமாவளவன் மற்றும் சீமானை பாஜகவினர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி பிரமுகர் ஹரிஷ் கார் கல் வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகளான தமிழ்ச்செல்வன், ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சிலையை யார் வைப்பது என்பது தொடர்பான மோதலில் இந்த கார் வீச்சு சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications