கோவையை கலக்கும் டபுள் டக்கர் பஸ்.. பிரம்மித்த பயணிகள்! இலவசமாகவே செல்லலாம்.. எப்படி தெரியுமா?
கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை நகரத்தின் முக்கிய இடங்களை மக்கள் சுற்றி பார்க்க வசதியாக டபுள் டக்கர் பேருந்து இயக்கப்படுகிறது. செல்போன் ஆப் மூலம் புக்கிங் செய்து பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் கோயம்புத்துர். தொழில்வளம் நிறைந்த இந்த நகரம் சென்னைக்கு அடுத்த படியாக அதி வேகமாக வளர்ந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வட இந்தியாவில் இருந்து கோவை நோக்கிய படையெடுத்து வருவதை காண முடியும். கோவை நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப அங்கு உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் அமைப்பது, போக்குவரத்து சிக்னல்களை அதிகரிப்பது என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கோவையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். சரி இதெல்லாம் இருக்கட்டும். இங்கே விஷயத்திற்கு வருவோம்..
கோவை மாவட்டத்தை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் சார்பில் கோவை திருவிழா வரும் 2-ஆம் தேதி முதல் 8- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை விழாவை ஒட்டி மாரத்தான், தெருஓவியம், இசை மழை, பசுமை கோவை, கலாசார நிகழ்ச்சிகள், உரிமை பயணம், ஒலி, ஒளி நிகழ்ச்சி, சைக்ளத்தான் சிறப்பு ஒலிம்பிக் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த விழாவின் ஒரு பகுதியாக கோவை நகரத்தின் முக்கிய இடங்களை மக்கள் சுற்றி பார்க்க வசதியாக டபுள் டக்கர் பேருந்து இயக்கப்படுகிறது. செல்போன் ஆப் மூலம் புக்கிங் செய்து 24-ந் தேதி முதல் ஜனவரி 11-ந் தேதி வரை டபுள் டக்கர் பஸ்சில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்’ என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று டபுள் டக்கர் பேருந்து பயணம் கோவை வ.உ.சி. பூங்கா அருகே பார்க்கேட் பகுதியில் இருந்து மாலை தொடங்கியது.
இந்த பேருந்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் குடும்பத்துடன் பயணம் செய்தனர். இந்த ஆண்டு 2 டபுள் டக்கர் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் 36 இருக்கைகள் உள்ளன. பேருந்தில் பயணம் செய்தவர்கள் டபுள் டக்கர் பேருந்தில் பயணம் செய்தபடி நகரின் அழகை ரசித்தபடி பயணம் செய்தனர். பலரும் செல்பி எடுத்துசெல்வதையும் பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications