5 பேருக்கு நீதிமன்ற காவல்.. கார் சிலிண்டர் வெடிப்பின் பின்னணி என்ன? பரபரக்கும் கோவை
கோவை: உக்கடம் அருகே தீபாவளிக்கு முதல்நாள் கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் நவம்பர் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் நேற்று அதிகாலை 4.10 மணியளவில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நபர் உயிரிழந்தார்.
கார் வெடித்த பகுதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தகவலறிந்த டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

ஜமேஷ் முபின்
இந்த நிலையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் ஜமேஷ் முபின் என்ற பொறியியல் பட்டதாரி என்பது தெரியவந்தது. அவர் ஓட்டிவந்த சென்னை பதிவு எண் கொண்ட கார் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு முன் இந்த கார் 10 பேரிடம் கைமாறியது விசாரணையில் தெரியவந்தது.

டிஜிபி விளக்கம்
இந்த சம்பவம் விபத்தா? அல்லது சதிவேலையா? என்பது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
இறந்த நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரணை செய்யப்பட்டவர் என்று சைலேந்திர பாபு தெரிவித்தார்.

வெடிமருந்து
ஜமேஷ் முபினின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்ததாகவும், காரில் ஆணிகள், பால்ரஸ்கள் இருந்ததாகவும் டிஜிபி கூறி இருக்கிறார். இறந்தவர் மீது வழக்குகள் இல்லை என்றும், அவர் தற்கொலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அவர் தெரிவித்தார்.

7 பேரிடம் விசாரணை
நேற்று ஜமேஷ் முபின் மற்றும் அவருடன் சிலர் வீட்டில் இருந்து வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதற்கிடையே ஜமேஷ் முபின் இறப்பதற்கு முதல் நாளான சனிக்கிழமை இரவு அவரோடு இருந்த 4 பேர் உட்பட 7 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

5 பேர் கைது
கார் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேஷ் முபின் என்பவர் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்ற காவல்
5 பேர் மீது போலீசார் யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அவர்களை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் ராஜா முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இதனை அடுத்து 5 பேரையும் நவம்பர் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications