வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டத்தில் முறைகேடு? எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்பு என புகார்.. ‘பரபர’ கோவை!
கோவை : வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான டெண்டரில் பல கோடி முறைகேடு செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தில் சர்ச்சைகள் சுற்றி வளைக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, பேருந்து நிலையம் கட்டும் திட்டம் இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதிமுக கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டத்தில் எஸ்.பி.வேலுமணி முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் திமுகவைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் புகார் அளித்துள்ளார்.

வெள்ளலூர் பேருந்து நிலையம்
கோவை மாவட்டம் வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் அதிமுக ஆட்சியில் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கியது. ரூ.168 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தத் திட்டத்திற்கான செலவை மாநில அரசும் கோவை மாநகராட்சியும் சரிபாதியாக பகிர்ந்து கொள்கின்றன. கொரோனா காரணமாக வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் சுணங்கிய நிலையில் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் பேருந்து நிலையம் இடமாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

அதிமுக கண்டனம்
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான தனியார் ரியஸ் எஸ்டேட் நிறுவனம் ஒன்று கோவையில் பல்வேறு இடங்களில் நிலங்களை வாங்கி வருகிறது. அந்த நிறுவனத்துக்கு சாதகமாக வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு வேறு இடத்திற்கு மாற்றி அதன் நில மதிப்பை உயர்த்த திமுக அரசு முயற்சிக்கிறது. வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றும் முடிவை கைவிடவில்லையென்றால் அதிமுக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் எனத் தெரிவித்திருந்தார்.

ஊழல் புகார்
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், அந்த முறைகேட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்பு உள்ளது என்றும், இந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு திமுகவைச் சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் புகார் அனுப்பியுள்ளார்.

பினாமிகள்
பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான 60 ஏக்கர் இடத்தை எஸ்.பி.வேலுமணி முறைகேடான வகையில் தேர்வு செய்து ரூ.168 கோடி ஒதுக்கப்பட்டதாக அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கும், அவரது பினாமிகளுக்கும் கட்டுமானப் பணிக்கான டெண்டர் விடப்பட்டு, 20 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

வரிப்பணம் வீணடிப்பு
வேலுமணியும் அவரது பினாமிகளும் பேருந்து நிலையத்தை சுற்றி பல கோடி மதிப்பிலான நிலங்களை வாங்கியுள்ளனர். அதற்காகவே இங்கு பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுத்துள்ளனர். பேருந்து நிலையத்துக்கு பொருத்தமற்ற இடத்தை தேர்வு செய்ததன் மூலம் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் இத்திட்டத்தை நிறுத்தி, கால்நடை பராமரிப்பு வசதி அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான திட்டமாக மாற்ற வேண்டும். என தனது புகாரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications