விபத்தில் தம்பதி காயம்.. பதறிய செந்தில் பாலாஜி! மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்! குவியும் பாராட்டு
கோவை: கோவை அன்னூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
டெல்டா மண்டலத்தில் திமுக பலவீனமாக உள்ள நிலையில், திமுகவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக டெல்டா மண்டலங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, திமுக அமைச்சர்கள்- நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

டெல்டா
குறிப்பாகக் கோவை மாவட்டத்தில் திமுக கடந்த சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனால் கோவையில் திமுகவை வலுப்படுத்தும் வகையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவர் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் தான் அவர் செய்த செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் செந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஸ்ரீதர்- கிருத்திகா. இவர்கள் இருவரும் தங்களுக்குச் சொந்தமான காரில் மேட்டுப்பாளையயத்தில் இருந்து பல்லடம் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மற்றொரு காரில் கணவன், மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வந்து கொண்டிருந்துள்ளனர்.

செந்தில் பாலாஜி
அப்போது, குருக்கிலியம்பாளையம் பேருந்து நிலையம் அருகே வரும் போது எதிர்பாராத விதமாக இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கார்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இவ்விபத்தில் பல்லடத்தை சேர்ந்த தம்பதிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்போது, நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து விட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் சாலை வழியாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவைக்குத் திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.

மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களைக் கண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக அவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர்களுடன் அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட திமுகவினரையும் அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாராட்டு
மேலும், இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அன்னூர் அருகே விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications