திமுக மகளிரணி நிர்வாகிகள் நேர்காணல்! கனிமொழி படம் இல்லாத போஸ்டர்! கோவையில் சலசலப்பு!
திமுக மகளிரணி நிர்வாகிகள் நேர்காணல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
கோவை: திமுக மகளிரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் மாவட்ட வாரியாக நடைபெற்று வரும் நிலையில் நாளை கோவையில் நடைபெறவுள்ளது.
இதற்காக அடிக்கப்பட்ட போஸ்டர் தான் திமுக தலைமை வரை பஞ்சாயத்துக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திமுக மகளிரணி மேற்பார்வை பொறுப்பாளராக கனிமொழியை ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் அவரது பெயரும், படமும் இல்லாமல் கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் அடித்துள்ள போஸ்டர் தான் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மகளிரணி
தமிழகம் முழுவதும் திமுக மகளிரணி நிர்வாகிகள் நேர்காணல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகளிரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமையிலான குழு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று இண்டர்வியூ நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் நாளை கோவை மாவட்டத்தில் திமுக மகளிரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. கோவை தெற்கு, கோவை வடக்கு, கோவை மாநகரம் என மூன்று பிரிவுகளாக நாளை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நேர்காணல் நடத்தப்படவுள்ளன.

கனிமொழி பெயர்
இந்நிலையில் இதற்கான விளம்பர போஸ்டரில் கனிமொழி படம் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்துக்கு செந்தில்பாலாஜி பொறுப்பு அமைச்சராக உள்ளதால் அவரது முன்னிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் படி நேர்காணல் நடக்கும் என அச்சிடப்பட்டு ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த நேர்காணலுக்கும் துளியும் தொடர்பு இல்லாத நிலையில் அவரது அறிவுறுத்தல்படி என்று போஸ்டர் அச்சிட்ட ஆர்வக்கோளாறு நிர்வாகிகளால் தேவையற்ற சர்ச்சை வெடித்துள்ளது.

மகளிரணி நேர்காணல்
திமுக மகளிரணி மேற்பார்வை பொறுப்பாளராக கனிமொழியை ஸ்டாலின் அறிவித்துள்ளதால், மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற நேர்காணல்களில் எல்லாம் கனிமொழியின் படமும் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கோவையில் மட்டும் அதற்கு விதிவிலக்காக போஸ்டர் அச்சிடப்பட்டது தான் இப்போது புகைச்சலை கிளப்பியுள்ளது. இது குறித்து கனிமொழியின் கவனத்துக்கு அவரது ஆதரவாளர்கள் கொண்டு சென்றதால் அவர் கடும் அப்செட் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்வக்கோளாறு
திமுகவில் உள்ள ஒரு சில ஆர்வக்கோளாறு நிர்வாகிகளால் தான் இது போன்ற தேவையற்ற சங்கடங்களை கட்சி தலைமை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வருகிறது. இவர் படத்தை போட்டால் அவர் கோபித்துக் கொள்வாரோ, அவர் படத்தை போட்டால் இவர் கோபித்துக் கொள்வாரோ என தாங்களாகவே ஒரு முடிவை எடுக்கும் ஒரு சில நிர்வாகிகளால் தான் இது போன்ற சர்ச்சைகள் உருவாகின்றன.












Click it and Unblock the Notifications