"மொத்த குடும்பமும் ராணுவ ரத்தம்".. துபாய் தேஜஸ் விமானத்தில் பலியான விமானி பின்னணி!
கோவை: துபாய் விமான கண்காட்சியில், இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது. இதில் போர் விமானி நமன் சியால் உயிரிழந்தார். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, கண்காட்சிக்கு சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நமன் சியால் குறித்து மேலும் பல்வேறு தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது. கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை 5 நாட்கள் இந்த நிகழ்வு நடைபெற்றது. முதல் 4 நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாத, கடைசி நாளான நேற்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. பல்வேறு நாட்டின் போர் விமானங்கள், தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

தேஜஸ் விமானம் விபத்து
இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இந்திய விமானப்படை சார்பில், தேஜஸ் (டCA MK -1) திடீரென நொறுங்கி விபத்தில் சிக்கியது. விமானத்தை இயக்கிய விங் கமென்டர் நமன் சியால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேஜஸ் விமானம் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விமானம் விபத்தில் சிக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே இதேபோல விபத்து நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக அதில் உயிரிழப்பு நிகழவில்லை. நமன் சியாலின் இழப்பு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மொத்த குடும்பமும் ராணுவம்
நமன் சியால் இமாச்சால்பிரதேசம் மாநிலம், கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 34. சயாலின் மனைவியும் இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். திரா பகுதியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
நமன் தன் பெற்றோர் மற்றும் குழந்தையுடன் கோவை சூலூர் விமானப்படை தளம் வளாகத்தில் வசித்து வந்துள்ளார். அவரின் மனைவி கொல்கத்தாவில் பயிற்சியில் இருக்கிறார். சியாலின் அப்பா ஜெகன்நாத் இந்திய ராணுவத்தின் மருத்துவ பிரிவில் சிறிது காலம் பணியாற்றி, பிறகு கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ப்பணிப்பு, துணிவு
மிகவும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நமன் சியாலுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரின் மறைவுக்கு இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி, இமாச்சல் பிரதேச அரசு, அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications