நாட்டை உலுக்கிய டெல்லி ஷ்ரத்தா கொலை.. கோவையிலும் மதமாற்ற காதலா? மத வெறி வதந்தி என எச்சரித்த போலீஸ்
கோவை: டெல்லியை சேர்ந்த பெண், காதலரால் கொல்லப்பட்ட சம்பவத்துடன் ஒப்பிட்டு கோவையில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்ணை வேறு மதத்தை சேர்ந்தவர் காதல் வலையில் வீழ்த்திவிட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலில் உண்மை இல்லை எனவும், இதுபோன்ற தகவலை பகிர்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாநகர ஆணையர் எச்சரித்து உள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறின.
இந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மாநில காவல்துறை அதிகாரிகளும், மாநகர காவல் துறையினரும் ஆறு பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தற்போது NIA விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத துவேச பதிவுகள்
இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் மத துவேசத்தை பரப்பும் வகையில் பல்வேறு அவதூறான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவையை மையப்படுத்தி பல்வேறு வதந்திகள் வெளியிடப்பட்டு உள்ளன. அந்த வகையில் டெல்லியில் ஒரு பெண் காதலரால் பல துண்டுகளாக வெட்டிக்கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டி கோவையில் ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக ஒரு பதிவு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
கோவை போலீஸ் விளக்கம்
இந்த நிலையில் இப்பதிவு குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், "சமீபகாலமாக சமூக வலைதளங்கள மற்றும் வாட்ஸ்அப் மூலமாக கோவை மாநகரில் நடந்ததாகத் தெரிவித்து ஒரு அவதூறு தகவல் சமூகவிரோதிகளால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.
காதலில் வீழ்த்த சதி?
அந்த தகவலில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்துவதற்காக மாற்று மதத்தை சார்ந்த ஒரு நபர் அவரது வகுப்பு தோழி மூலமாக முயற்சிகள் செய்ததாகவும், இந்த விபரம் தெரியப்பட்டு மேற்படி மாற்று மதத்தை சார்ந்த பெண் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உண்மை தன்மை இல்லை
அத்துடன் டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இணைத்து பொய்யாக மதத் துவேசத்தை தூண்டும் வண்ணம் செய்தி பகிரப்பட்டு வருகிறது. மேற்படி சம்பவம் கோவை போன்று வெவ்வேறு ஊர் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தில் இவ்வாறு பகிரப்படும மேற்படி தகவலானது உண்மைத் தன்மையற்றது.
சம்பவமே நடக்கவில்லை
இது போன்று சம்பவம் ஏதும் நடந்ததாக ஏதும் தெரியவரவில்லை. மேலும் காவல்துறைக்கும் தனிப்பட்ட நபரிடமிருந்தோ அல்லது எந்தவொரு கல்லூரி நிர்வாகத்திடமிருந்தோ அல்லது இரகசிய தகவலாகவோக் கூட எந்த தகவல்களும் வரவில்லை. எனவே இச்செய்தியின் பின்னணியில் முழுக்க முழுக்க உண்மையற்ற தகவல்களை வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை
இதை ஏதோ ஆதாயம் பெறும் உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் யாரோ சிலர் பரப்பியும் பகிர்ந்தும் வருவதாகத் தெரிய வருகிறது. இதுபோன்ற மதத்துவேசத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற நோக்கில் பொய்யான தகவல்களை பரப்புவோர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது சட்டபூர்வமாக கடுமை" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.