கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கு! 3 பேரை அடையாளம் காண போலீஸாருக்கு கிடைத்த முக்கிய துப்பு
கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேற்று போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்ட அந்த 3 பேர்தான் என்பது அடையாளம் காணப்பட்டது எப்படி என்பதை பார்க்கலாம்.
மதுரையை சேர்ந்த 19 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனியாக விடுதி எடுத்து தங்கி வருகிறார். இவருக்கு ஒண்டிப்புதூரை சேர்ந்த இளைஞர் நண்பர். இருவரும் விடுமுறை நாட்களில் வெளியே சென்றுவிட்டு வருவது வழக்கமாம்.

அந்த வகையில் நேற்று முன் தினம் (நவ.2) விடுமுறை என்பதால் மாணவி, அந்த நண்பருடன் வெளியே பல இடங்களுக்குச் சென்றுவிட்டு கடைசியாக கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகருக்கு வந்தனராம்.
அவர்கள் ஒரு காலி இடத்தில் காரை நிறுத்திவிட்டு உள்ளே அமர்ந்தபடியே பேசி கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு கார் இருப்பதை அவ்வழியாக சென்ற 3 பேர் பார்த்தனராம்.
அவர்கள் ஃபுல் போதையில் காரின் அருகே சென்று பார்த்த போது உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனராம். அவர்களை பார்த்ததும் இவர்கள் மூவரும் வெளியே வருமாறு அழைத்துள்ளனர்.
ஆனால் அவர்கள் வெளியே வர மறுத்து அந்த இடத்தை விட்டு காரை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனர். அப்போது காரை வழிமறித்த மூவரும் ஆத்திரத்தில் கார் கண்ணாடிகளை அரிவாளால் உடைத்தனர்.
அப்போது அந்த ஆண் நண்பர் வெளியே வந்து ஏதோ விளக்கம் கொடுத்துள்ளார். உடனே அந்த போதை ஆசாமிகள் கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு அந்த இளைஞரின் மண்டையில் வெட்டினர். இதனால் அவர் மயங்கிவிழுந்தார்.
இதையடுத்து அந்த மாணவியை மூவரும் சேர்ந்து தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றனர். இதனிடையே அந்த ஆண் நண்பருக்கு மயக்கம் தெளிந்து பார்த்த போது நள்ளிரவு 2 மணியானது. தன்னுடன் வந்த மாணவியை தேடிய போது அவர் அந்த இடத்தில் இல்லை.
இதனால் பதறிய அந்த இளைஞர் 100-க்கு போன் செய்து உதவி கேட்டார். இதையடுத்து பீளமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த மாணவியை தேடினர். அதிகாலை 4 மணி அளவில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் அந்த பெண் தவித்துக் கொண்டிருந்தார். உடனே போலீஸார் அந்த பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த 3 பேரை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.
இந்த நிலையில் நேற்று 11 மணிக்கு அந்த 3 பேர் துடியலூரை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் மறைந்திருப்பதை அறிந்த போலீஸார் அந்த இடத்திற்கு சென்ற போது அவர்கள் போலீஸாரை அரிவாளால் தாக்கினர்.
இதையடுத்து போலீஸார் அவர்கள் மூவரையும் சுட்டு பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கார்த்தி என்கிற காளீஸ்வரன், சதீஷ் என்கிற கருப்பசாமி, குணா என்கிற தவசி ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து காயமடைந்த அவர்கள் மூவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் கோவை மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தில் அவர்கள் மூவர்தான் அந்த கொடூரர்கள் என்பதை அறிய போலீஸாருக்கு ஒரு துப்பு கிடைத்தது.
அதாவது மாணவியை போலீஸார் மீட்ட இடத்தின் அருகே கேட்பாரற்று நின்றிருந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு அவர்கள் மூவரையும் போலீஸார் அடையாளம் கண்டு வெள்ளக்கிணறு பகுதியை சுற்றி வளைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications