யாருக்காக ரோடு போடுறோம்..மக்களுக்குத்தானே! நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியம் - அமைச்சர் எ.வ.வேலு
கோவை : அரசின் சார்பாக வளர்ச்சியை நோக்கி புதிதாக சாலைகளை அமைப்பதாக இருந்தாலும் சரி சாலைகளை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியம் எனவும், நிலம் கையகப்படுத்துவது சாலை அமைப்பது என்றால் யாருக்காக என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு உச்சநீதிமன்றம், மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதோடு, இத்திட்டத்தை 2025ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இறுதிக்கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்தல், தடத்தில் சில மாற்றம் செய்து, இம்மாதத்தில் முழு வடிவம் பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இருந்து சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த கடந்த அதிமுக அரசு மும்முரம் காட்டியது. ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடின. பல்வேறு கட்டப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
ஆன்மீகத்திற்கு எதிரானவரா கருணாநிதி? பாஜக ஏமாற்றப் பார்க்கிறது.. சொல்கிறார் அமைச்சர் எவ வேலு!
திமுக ஆட்சி
திமுக ஆட்சியில் இந்த சாலை அமைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவது சாலை அமைப்பது என்றால் யாருக்காக.. மக்களுக்காகத் தானே என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்.எ.வ.வேலு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
எ.வ.வேலு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ வேலு," கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெய்க்கா நிதியுதவியுடன் தரைத்தளத்தில் சேர்ந்து ஆறு தளங்களை கட்டுகின்ற புதிய கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த 2023 மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும். கட்டுமான பணிகள் முடிந்து அடுத்த கட்ட பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது.
மருத்துவ கட்டமைப்புகள்
தமிழக முதல்வரின் கரங்களால் இந்த கட்டிடம் திறக்கப்படும். தீக்காயத்திற்கு என்று தனி பகுதி கட்டப்படுகிறது. 8 ஆப்ரேஷன் தியேட்டர்கள் மற்றும் 2 சிறு ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டப்படுகிறது. அதேபோல மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க தார் சாலைகள் மருத்துவமனை முழுவதும் முதல்வரின் கவனத்தின் மூலம் அமைக்கப்படும்.
சாலை அமைப்பது யாருக்காக?
அரசின் சார்பாக வளர்ச்சியை நோக்கி புதிதாக சாலைகளை அமைப்பதாக இருந்தாலும் சரி சாலைகளை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியம். நிலம் கையகப்படுத்துவது சாலை அமைப்பது என்றால் யாருக்காக. நகரப் பகுதியில் நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கிறோம்.அரசு திட்டங்கள் நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும். அதேபோல அரசு திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை செய்து திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கை தான் நடைபெறும்" என கூறினார்.