கோவை டூ மேட்டுப்பாளையம்.. பல வருட ஆசை நிறைவேறுகிறதா? சத்தம் இல்லாமல் எல் முருகன் செய்த விஷயம்
கோவை: கோவை மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் பல வருட ஆசையாகவும், கனவாகவும் உள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம், மத்திய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை மற்றும் மேட்டுப்பாளையம் இடையே 43 கிலோ மீட்டர் தூரமும் கோவை மாநகரம் விரிவடைந்துள்ளது. குறிப்பாக துடியலூர், பெரிய நாயக்கன் பாளையம், காரமடை வரை முழுமையாக கோவை மாநகரம் வளர்ந்துள்ளது. அந்த பகுதியில் ஏராளமான பம்பு செட் நிறுவனங்கள், மோட்டார் நிறுவனங்கள் , காற்றாலை நிறுவனங்கள், கல்லூரிகள், சிஎன்சி மிஷின் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. கோவை மாநகரின் தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள பகுதியாக கோவை மேட்டுப்பாளையம் சாலை இருக்கிறது.

இந்த பகுதியில் கோவை மேட்டுப்பாளையம் இடையே தினசரி ரயில் போக்குவரத்து இருக்கிறது. இந்த பாதையை இரட்டை பாதையாக மாற்றினால், பயணிகள் ரயிலை அதிக அளவில் விட முடியும் என்ற கோரிக்கை உள்ளது. வணிக ரீதியாகவும் இந்த பகுதியில் தெற்கு ரயில்வேக்கு லாபம் ஈட்டுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. இதனால் கோவை மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவினை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல் முருகன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கி இருக்கிறார்.
இது குறித்து எல் முருகன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் கோவை ரயில்நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைத்திட வேண்டும் என மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும், நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அதற்கான மனுவை, இன்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வழங்கினேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications