'அதிமுக ஆட்சியில் நிதி ஆதாரமே இல்லாமல் போனது..' சீண்டும் செந்தில் பாலாஜி.. ஜோராகும் கொங்கு அரசியல்
கோவை: கொங்கு மண்டலத்தில் வலுவான கட்சியாக உருவெடுக்க திமுக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதிமுக ஆட்சி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்
Recommended Video
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் ஃபவுண்டேஷன் சார்பில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதனை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கோவையில் செந்தில் பாலாஜி
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்திட வேண்டும் என்ற நோக்கோடு முதல்வர் செயல்பட்டு வருகின்றார் எனவும் வீடுவாரியாகச் சென்று மாற்றுத்திறனாளிகள் பட்டியலைத் தயாரித்து அவர்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ஒரு கோடியே 13 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல்வரின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று கோவை மாவட்டத்தில் 45 நிமிடம் பெய்த கன மழையில் 71மிமீ கனமழை பெய்துள்ளது. இதனால் கோவையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தற்போது போக்குவரத்து சீர் செய்யப்பட்டு உள்ளது.

தவறை ஒத்துக்கொள்ளுங்கள்
மேலும் கோவை மாவட்டத்தில் மழைக் காலங்களுக்காகத் திட்ட வரைவு அறிக்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது முடிந்த பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிமுக எம்எல்ஏக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தந்த டெண்டர் விபரங்கள் தெளிவாக இல்லை. அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. அதே சமயம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை அதிமுகவினர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சி
கடந்த ஆட்சியின் போது பல பணிகள் தொடங்கப்படவில்லை. நிதி ஆதாரம் இல்லாமல் போனதே கடந்த ஆட்சியில் பல்வேறு பணிகள் தொடங்கப்படாமல் இருந்ததற்கு முக்கிய காரணம். கடந்த ஆட்சியின் பொழுது டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் நிதி இல்லை என்பதால் பணிகளை விட்டு விட்டுச் சென்றுவிட்டனர். தேர்தல் நேரங்களில் தீர்மானங்கள் இல்லாமல் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளன. தேர்தலுக்கு முன்னரே சாலைகள் பராமரிக்க வேண்டும் என்ற சிந்தனை ஏன் கடந்த ஆட்சியாளர்களுக்கு வரவில்லை.

200 கோடி ரூபாய்
தற்பொழுது முதல்வர் 200 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீரால் சேதமடைந்த சாலைகளைச் சீர் செய்ய நிதி அளித்துள்ளார். 20 கோடி ரூபாய் செலவில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்காக டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது. சூயஸ் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல மலைவாழ் மக்களின் அன்றாடத் தேவைகளான மின்சாரம், சாலை வசதிகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகள் பயனாளர் அட்டைகள் பெறுவதில் உள்ள சிரமங்களைக் களைவதற்கு வீடு வாரியாக ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications