இனி கோவை ஸ்டாலினின் கோட்டை.. மாஸ் காட்டும் செந்தில் பாலாஜி.. ஜெயிச்சதுக்கு வார்த்தையில் நன்றி இல்லை!
கோவை : கோவை அதிமுகவின் கோட்டை என மக்கள் ஒருபோதும் கூறியதில்லை எனவும் இனி கோவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோட்டை என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் கோவையில் வரலாறு காணாத வெற்றியை திமுக பெற்றது.
சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்லமுடியாத திமுக ஆறே மாதங்களில் கோவை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றி அசத்தியது.
அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவையில் திமுக பெற்ற வெற்றிக்கு முழுக்க முழுக்க செந்தில்பாலாஜி தான் காரணம் என திமுகவினர் அடித்துச் சொல்லி வருகின்றனர். கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக கோவையில் முகாமிட்டு செந்தில்பாலாஜி அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தினார். ஆய்வு கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள், பிரம்மாண்டமான மாநாடுகள் என கோவை உடன்பிறப்புகளை உற்சாகத்தில் ஆழ்த்திய செந்தில்பாலாஜி முதலில் கோவை திமுகவினரால் கண்டுகொள்ளப்படவில்லை.
கோவையில் வெற்றி
தொடர்ந்து தனது அதிரடி செயல்பாடுகள் மூலம் கோவையில் காலூன்றிய செந்தில்பாலாஜி தொடர்ந்து பல அதிரடி திட்டங்கள் மூலம் வெற்றிக் கொடி நாட்டினார். அவரது அதிரடி செயல்பாடுகளால் கோவை மாநகராட்சி உள்ளிட்ட. உள்ளாட்சி அமைப்புகளை வென்றது. தொடர்ந்து அவரை நேரில் அழைத்து பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு கௌரவ பதவி ஒன்றை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஸ்டாலின் கோட்டை
இதே போல தனது சொந்த ஊரான கரூரில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற செந்தில் பாலாஜி அவ்வப்போது கோவைக்குச் சென்று மக்கள் நலத்திட்டங்களையும் துவங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் கோவையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை அதிமுகவின் கோட்டை என மக்கள் ஒருபோதும் கூறியதில்லை எனவும் இனி கோவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோட்டை என கூறியுள்ளார்.
மக்கள் சொல்லவில்லை
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு நன்றி என்பதை வார்த்தையாக சொல்லாமல் முதல்வரின் திட்டங்கள் மூலம் சொல்வோம் எனவும், கடந்த ஆட்சியில் நிதி பெற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் விசாரிக்கப்படும் என்றார் . மேலும், கோவையை அதிமுகவின் கோட்டை என பொதுமக்கள் ஒருபோதும் கூறவில்லை, இனி எப்போதும் கோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டை என்றும் செந்தில் பாலாஜி கூறினார்.