மழை வந்தாலும் ‘பவர் கட்’ இருக்காது! 11 ஆயிரம் பேர் களத்தில் உள்ளனர்! அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!
கோவை : மழையின் காரணமாக 11,000 பேர் மின்வாரியத்தின் மூலம் சிறப்பு பணிகளை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் மழைக்காலங்கள் மின் தடை ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முதல்நிலை கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையிலும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் ,மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

செந்தில் பாலாஜி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி," 'மழையால் மக்களுக்கு பாதிப்பு வர கூடாது என்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் மழையால் கடந்த ஆண்டு பல இடங்களில் நீர் தேங்கியது. கடந்த ஆண்டின் பாதிப்பை ஆய்வு செய்து இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழை நீர் பாதிப்பு
32 வாய்கால்களில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, மழை நீர் பாதிப்புகள் ஏற்படாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக மழை பொழிந்தாலும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு பணி
11 ஆயிரம் பேர் மின் வாரியத்தில் மழைக்காலங்களில் சிறப்பு பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் இக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நடத்த இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக குறைந்த மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிநிலைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

சாலை சீரமைப்பு
மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் கடந்த ஐந்து ஆண்டில் எந்தவிதமான சாலையும் போடவில்லை. இதற்கான சிறப்பு நிதி ரூ.200 கோடியில், 26 கோடி விடுவிக்கப்பட்டு கோவை மாநகராட்சியில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திற்குள் பழுதடைந்த சாலைகள் சரி செய்யப்படும்' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications