வேட்டியை மடிச்சு கட்டி வயலில் நாற்று நட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி... இது வேற லெவல் அரசியல்
அமைச்சர் எஸ்.பி வேலுமணி வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு நெல் வயலில் இறங்கி நாற்று நட்டுக்கொண்டே விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
கோவை: இப்போதய அரசியலில் ஆக்டிவ் ஆக இல்லாவிட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என்பதை எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அமைச்சர் எஸ்.பி வேலுமணி நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கப் போன இடத்தில் வயலில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இறங்கி நாற்று நட்டுக்கொண்டே மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Recommended Video
எதிர்கட்சியினர் வேட்டியை மடித்துக்கட்டிகொண்டு வயலில் இறங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டால் அதை விட ஒருபடி மேலே செல்கிறார்கள் ஆளுங்கட்சியினர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல் நாற்றுக்களை தொட்டுக்கொடுக்கிறார். களை பறிக்கும் பெண்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.
முதல்வர் பாணியை இப்போது அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோவை சாடிவயல் பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்தார்.
சாடிவயல் அருகில் உள்ள கல்குத்தி பதி என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது சாலையோர வயலில் பழங்குடியின மக்கள் நெல் நாற்று நட்டுக் கொண்டிருந்ததை பார்த்த அமைச்சர் காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார்.
வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வயல் வரப்பில் நடந்து சென்று நடவு பணி செய்து கொண்டிருந்தவர்களிடம் நலம் விசாரித்தார். அதோடு நிற்காமல் திடீரென்று சேறு நிரம்பிய வயலில் வேட்டியை மடித்துக் கொண்டு இறங்கி ஒரு கட்டு நெல் நாற்று கட்டை கையில் வாங்கி மடமடவென நட ஆரம்பித்தார்.
எஸ்.பி.வேலுமணி பழங்குடியின மக்களுடன் இணைந்து நெல் நாற்று நட்டதைப் பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் நின்று வேடிக்கை பார்த்து விட்டு சென்றனர்.
நாற்று நட்டுக்கொண்டே மலைவாழ் மக்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மலைவாழ் மக்களின் தேவைகள் என்ன? வாழ்வாதாரம் எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றி கேட்டறிந்தார். மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்கு தடையின்றி செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிற வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து அவர்களின் வருமானத்தைப் பலமடங்காக உயர்த்திடவும்,தமிழகத்தில் 2ஆம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், தமிழக அரசு ஆண்டுதோறும் நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கி வருகிறது.
திருந்திய நெல்சாகுபடி முறைகள், நேரடி நெல் விதைப்பு ஆகியதொழில்நுட்பங்களாலும் சமுதாய நாற்றங்கால் முறையிலும் நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தக்க காலத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2020--21ஆம் நிதியாண்டில் கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும்கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
எதிர்கட்சியினர் நெல் வரப்பில் இறங்கினால் ஆளுங்கட்சியினரும் அமைச்சர்களும் வயலில் இறங்கி நாற்று நட ஆரம்பித்து விட்டனர் இது வேற லெவல் அரசியல்தான் போங்க.