உடல் முழுக்க ‘ஷேவ்’! ’விஸ்வரூபம்’ பாணியில் தயாரான ஜமேஷா முபின்! கோவை கார் வெடிப்பில் வெளியான ’பகீர்’
கோவை : கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதிர வைக்கும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிறன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காரில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது யார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, எடிஜிபி தாமரைன் கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

கோவை கார் விபத்து
விபத்து தொடர்பாக சென்னை தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். காரில் எரிந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆணிகள் கோலிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது.

சக்திவாய்ந்த வெடி பொருட்கள்
இந்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன் ,ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ், அன்சார், இஸ்மாயில் உள்ளிட்ட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடும், யாருக்கும் கிடைக்காத வகையில் அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் அவர்கள் வீட்டில் இருந்து கண்டறியப்பட்டன.

பகீர் தகவல்கள்
இந்த வழக்கு தொடர்பாக தமிழகம் கடந்து பல்வேறு நிலைகளில் விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதை அடுத்து என்ஐஏ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடம் மற்றும் ஜமேஷா முபீனின் இல்லம் உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் சோதனை நடத்திய அவர்கள் பல்வேறு தடயங்களை சேகரித்துள்ளனர். குறிப்பாக பல்வேறு வெடி பொருட்கள் அவர்கள் தயார் செய்து வைத்திருந்ததும் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.

உடல் முழுவதும் ஷேவ்
மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை என்ஐஏ அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக ஜமேஷா முபின் தனது உடல் முழுவதும் சேவ் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சிலேட்டில் குறிப்புகள்
சில அடிப்படை தீவிரவாத அமைப்புகளில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு முன்பு தாக்குதலில் ஈடுபடும் நபர்கள் உடலில் உள்ள முடிகளை அகற்றி விட்டு தாக்குதலில் ஈடுபடும் வழக்கம். இந்த காட்சி கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திலும் வைக்கப்பட்டிருக்கும். தற்போது அதே நடைமுறையை ஜமேஷா முபின் பின்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஜிகாத் மற்றும் ஹதீஸ் குறித்து சில குறிப்புகளும் சிலேட்டில் ஐஎஸ் அமைப்பிற்கான வாசகங்கள் அரபு மொழியில் எழுதப்பட்டிருந்ததையும் கண்டறிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications