கோவை கார் வெடிப்பு விவகாரம்.. முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய என்ஐஏ.. 42 இடங்களில் சோதனை நிறைவு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 42 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது.
கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் எதிரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த காரில் இருந்தவர் ஜமோசா முபின் என தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் வீட்டை சோதனையிட்டபோது, வெடிகுண்டு தயாரிக்க தேவையான 75 கிலோ வெடி பொருட்கள் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஜமோசா முபினின் உறவினர்கள் உட்பட 6 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சிலிண்டரை வைத்து கோவையை சின்னாபின்னமாக்க முபின் பிளான்.. வீட்டிலிருந்த 109 பொருட்கள்: என்ஐஏ எப்ஐஆர்
என்ஐஏ விசாரணை
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. பின்னர் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.
ஒற்றை ஓநாய் தாக்குதல்
அதில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம், தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையை ஒத்திருப்பதாக தகவல் வெளியாகியது. ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது, தீவிரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக சித்தாந்த்திற்காக தாக்குதல் நடத்தும் முறையாகும்.
42 இடங்களில் என்ஐஏ சோதனை
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 42 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தினர்.
கோவையில் 20 இடங்களில் சோதனை
கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. உக்கடம் கோட்டை மேடு பகுதியில் சனோபர் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்துள்ள என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை நிறைவு
இந்த நிலையில் சென்னை, கோவை, நாகர்கோவில், திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடைபெற்ற என்ஐஏ அதிகாரிகளின் சோதனை நிறைவடைந்துள்ளது. காலை முதல் மதியம் வரை நடைபெற்ற சோதனையில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.